ஓடும் ரயிலில் பற்றி எரிந்த தீ! எலும்புக்கூடாக மாறிய 3 பெட்டிகள்.. வட மாநிலங்களில் தொடரும் தீ விபத்து
டெல்லி: டெல்லியில் ஓடும் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை மழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் இயல்பை விட 22 சதவிகிதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை போதுமான அளவுக்கு பெய்திருக்கிறது. இதனால் கோடை காலத்தின் தாக்கம் பெரிய அளவில் உணரப்படவில்லை. ஆனால், வட மாநிலங்களில் நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது.

டெல்லியில் 49.9 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 9 டிகிரி செல்சியஸ் அதிகம். ராஜஸ்தானில் 50 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகியுள்ளது. இது வழக்கத்தை விட 7.5 டிகிரி அதிகம். குஜராத், பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் என வடமாநிலங்களில் வெயில் பொளந்து கட்டி வருகிறது.
சமீபத்தில் உருவான ரெமல் புயல் மேற்கு வங்கத்தில் கனமழையை கொடுத்திருக்கிறது. இதற்காக வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஈரப்பதமான மேகங்களை புயல் உறிஞ்சிக்கொண்டது. இதுவும் வடமாநிலங்களில் வெயில் அதிகரித்ததற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. தற்போது அரபிக் கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற் குறிப்பிட்ட மாநிலங்களில் மழை பொழிவை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
இருப்பினும் தற்போது நிலவி வரும் வெப்ப அலை காரணமாக டெல்லியில் தீ விபத்துக்கள் அதிகரித்துள்ளன. கடந்த மே 25ம் தேதி டெல்லியில் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதி முழுவதையும் புகை மண்டலமாக மாற்றியது. கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தை மருத்துவமனையில் இரவு 11.32 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 8 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கடுமையான போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. மருத்துவமனையிலிருந்து 12 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு வென்டிலேட்டரில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல டெல்லியின் ஷாஹ்தாரா பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இங்குள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் 25ம் தேதி தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த தீயை அணைக்க 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. கட்டிடத்திலிருந்து 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிலருக்கு மட்டும் லேசான தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
வெப்ப அலை காரணமாக வழக்கத்தை விட அதிகமாக தீ விபத்து நடப்பதாகவும், விபத்து தொடர்பாக தங்களுக்கு தினமும் 200 போன் கால் அழைப்புகள் வருவதாக டெல்லி தீயணைப்பு துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று ஓடும் ரயிலில் தீ விபத்து நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹெச் நிஜாமுதீன் முதல் ஜான்சி வரை செல்லும் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயில் தீ பிடித்திருக்கிறது. ரயில் சென்றுக்கொண்டிருந்த பொது இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் இது வரை உயிர் பலிகள் எதுவும் பதிவாகவில்லை. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications