சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறை.. யூனிபார்மை கழற்றி வைத்து போராடிய டெல்லி போலீஸ்.. பரபரப்பு
Recommended Video
டெல்லி: சுதந்திர இந்தியா வரலாற்றில் முதல் முறையாக, காவல்துறையினர் சீருடையை கழட்டி வைத்துவிட்டு போராட்டத்தில் குதித்ததால் டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு நிலவியது.
டெல்லி திஸ் ஹஸாரே, நீதிமன்ற வளாகத்தில் கடந்த சனிக்கிழமை வழக்கறிஞர்கள் சிலருக்கும், போலீசார் சிலருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது வழக்கறிஞர்களை போலீசார் தாக்கியதாக அந்த தரப்பு குற்றஞ்சாட்டியது.
மேலும் சிலர், காவல்துறையினர் வாகனத்தை தீயிட்டு எரித்தனர். மேலும், நேற்றைய தினம் வக்கீல்கள் உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று காவல்துறையினருக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு தேவை என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர். போலீசாரின் தாக்குதலில் காயம் அடைந்ததாக கூறப்படும், வழக்கறிஞர்களுக்கு டெல்லி பார் கவுன்சில் நிதி உதவியை அறிவித்தது.

வரலாறு இல்லை
அதேநேரம் காவல்துறையினரை பொருத்த அளவில் அவர்கள் இணைந்து போராடி வரலாறு கிடையாது. அவர்களுக்காக சங்கம் அமைப்பதற்கு எந்த அரசும் அனுமதித்தது கிடையாது. அப்படி இருந்தும் கூட இன்றைய தினம் நூற்றுக்கணக்கான போலீசார் தங்கள் சீருடையை கழட்டி வைத்து விட்டு, சாதாரண உடையில் டெல்லி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பதாகைகள்
காவல்துறையினரை காப்பாற்றுங்கள்.., நாங்களும் மனிதர்கள் தான்.., என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை அவர்கள் தூக்கி பிடித்திருந்தனர். போலீஸ் கமிஷனரை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் இவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதையடுத்து சாலையிலேயே அமர்ந்து போலீசார் தர்ணா நடத்தினர். இதன் காரணமாக அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
|
எங்களையே காப்பாற்ற முடியவில்லை
ஒரு பெண் கான்ஸ்டபிள் இதுதொடர்பாக நிருபர்களிடம் பேசுகையில், எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்ள முடியாவிட்டால், மற்றவர்களுக்கு, நாங்கள் எப்படி உரிய முறையில் பாதுகாப்பு வழங்க முடியும்? என்பதுதான் எங்கள் முன்னால் நிற்கக்கூடிய கேள்வி. காவல்துறையினர் எந்த மாதிரி ஆபத்தில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது தொடர்பாக பொதுமக்களுக்கு அதிகம் தெரிய வாய்ப்பு கிடையாது. இந்த போராட்டம் எங்களின் பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
|
சமாதான முயற்சி
இதனிடையே துணை போலீஸ் கமிஷனர் சிங்கால் போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடும்படியும், போலீசாரின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் கோபங்கள், மூத்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இருப்பினும் போராட்டம் 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடருகிறது.
|
காங்கிரஸ்
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் ரந்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள, ட்வீட்டில் 72 வருடங்களில் முதல் முறையாக தேசிய தலைநகரான டெல்லியில் காவல்துறையினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இதுதான் பாஜக சொல்லக் கூடிய புதிய இந்தியாவா? இந்த நாட்டை எங்கு அழைத்துச் செல்கிறது பாஜக? நமது உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்கே இருக்கிறார்? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications