அடேங்கப்பா? புத்தாண்டை ஒட்டி ஸ்விக்கியில் 3.5 லட்சம் பிரியாணி விற்பனை.. காண்டம் விற்பனையும் படு ஜோர்
டெல்லி: பிரபல ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி மூலமாக, புத்தாண்டுக்கு முந்தைய நாளான நேற்று ஒருநாளில் பிரியாணி ஆர்டர் மட்டும் 3.5 லட்சம் வந்து குவிந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், அதிகம் விரும்பிய உணவு விடுதியின் விவரத்தையும் ஸ்விக்கி வெளியிட்டுள்ளது.
பண்டிகை நாட்களில் வீட்டில் வித விதமான உணவு வகைகளை செய்து சாப்பிட வேண்டும் என்று அனைவரும் விரும்புவர்கள்.
இதற்காக கடைகளில் போய் உணவுப்பொருட்கள் செய்வதற்கான பொருட்களை வாங்கி வந்து வீட்டில் மணக்க மணக்க சமைத்து குடும்பமாக ஒன்றாக அமர்ந்து சாப்பாட்டை ஒரு பிடி பிடிப்பதுண்டு. இதெல்லாம் 90 கிட்ஸ்களின் காலத்தோடு மறைந்து விட்டது என்று சொல்லும் அளவுக்கு தற்போது காலம் மாறிவிட்டது.

வீட்டின் வாசலுக்கே வந்து டெலிவரி
தற்போதைய ஸ்மார்ட் உலகில் இப்படி கஷ்டப்பட்டு வீட்டில் இருந்து சமைக்க வேண்டாம். நமக்கு நினைத்த உணவுகளை வீட்டில் இருந்த இடத்தில் இருந்து ஆர்டர் போட்டு சாப்பிடலாம் என்ற அளவுக்கு வசதிகள் பெருகிவிட்டது. நமக்கு பிடித்த உணவுகள், பிடித்த உணவகங்களில் ஆர்டர் போட்டால் அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டின் வாசலுக்கே வந்து டெலிவரி செய்து விட்டு விடுகின்றனர். இதுபோன்ற ஆன்லைன் உணவு விநியோக சேவையில் ஸ்விக்கி, சோமோட்டா போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

பண்டிகை காலங்களில்
இத்தகைய நிறுவனங்களின் மூலம் உணவுப்பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் மக்களிடையே தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது. அதிலும் பண்டிகை நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம். சாதாரண நாட்களை விட அதிக அளவில் பண்டிகை காலங்களில் ஆர்டர்கள் போடப்படுவதாக உணவு விநியோக நிறுவனங்கள் கூறுகின்றன. விடுமுறையில் வீட்டில் இருப்பதால் வீட்டில் இருப்பவர்களுடன் பிடித்த உணவுகளை பகிர்ந்து சாப்பிடுவதற்காக விரும்பும் பலரும் தற்போது ஆன்லைனின் அதிகமாக ஆர்டர் போடுகின்றனர்.

பட்டியலில் பிரியாணி முதலிடம்
இதனால், பண்டிகை காலங்களில் ஆன்லைன் உணவு சேவையில் பணியாற்றும் ஊழியர்கள் பரபரப்பாக டெலிவரி செய்வதைக் காண முடியும். இப்படி பண்டிகை காலங்களில் அதிகம் எந்த உணவு ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது என்ற விவரத்தை உணவு விநியோக நிறுவனங்கள் பகிர்வதுண்டு. இந்தப் பட்டியலில் சந்தேகமே இல்லாமல் பிரியாணி தவறாமல் இடம் பிடிக்கும்.

61 ஆயிரம் பிசாக்கள்
அந்த வகையில் தற்போது புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவில் அதிகம் எந்த உணவுகளை மக்கள் விரும்பி சாப்பிட்டார்கள் என்ற விவரத்தை ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் பிரியாணிதான் முதல் இடம் பெற்றுள்ளது. அதுவும் 3.6 லட்சம் ஆர்டர்கள் பிரியாணி நேற்று ஒருநாளில் மட்டும் நாடு முழுவதும் ஸ்விக்கி ஆப் மூலமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 61 ஆயிரம் பிசாக்கள் நாடு முழுவதும் விற்பனையானதாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

2,757 பாக்கெட் காண்டம்கள்
ஐதராபாத்தில் உள்ள பிரபலமான பவார்ச்சி என்ற உணவு விடுதி ஒரு நிமிடத்திற்கு 2 பிரியாணிகளை டெலிவரி செய்துள்ளது. அந்த ஒரு உணவு விடுதியில் மட்டும் 15 ஆயிரம் ஆர்டகள் பிரியாணி தயார் செய்யப்பட்டுள்ளது. இது தவிர வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் தளமாக உள்ள ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலமாக 1.76 லட்சம் சிப்ஸ் பாக்கெட்டுகள் டெலிவரி செய்யப்பட்டு இருப்பதாகவும் டூரக்ஸ் நிறுவனத்தின் காண்டம் விற்பனையும் அதிக அளவில் இருந்ததாக ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தெரிவித்துள்ளது. அதாவது, 2,757 பாக்கெட் காண்டம்கள் நேற்று ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலமாக விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications