மத்திய அரசு அதிரடி.. வெளிநாட்டு பயணிகளுக்கு அக்.15 முதல் புதிய விசா.. புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அக்.15 முதல் விசா வழங்கப்படுகிறது
டெல்லி: அக்டோபர் 15 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய சுற்றுலா விசா வழங்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.. சார்ட்டர் விமானம் தவிர மற்ற விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நவம்பர் 15 முதல் சுற்றுலா விசா வழங்கப்பட உள்ளது.
கடந்த 2 வருடங்களாகவே தொற்று பாதிப்பு இந்தியாவை ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது.. உலக அளவில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது.. எனினும் கொரோனா தொற்று எண்ணிக்கையை பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு குறைக்கப்பட்டு வருகிறது.
மற்றொரு பக்கம் தடுப்பூசிகளிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2வது டோஸை செலுத்தும் பணியில் அந்தந்த மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.. ஆனால், கடந்த ஆண்டு இறப்பு விகிதமும் அதிகமாக இருந்த நிலையில், தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுற்றுலா பயணிகளுக்கான அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்பட்டன.

விமான போக்குவரத்து
இந்தியாவில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவத் தொடங்கியது... உடனே உள்நாட்டு, சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.... கடந்த ஆண்டு மே மாதத்துக்கு பிறகு உள்நாட்டு விமான போக்குவரத்து படிப்படியாக அதிகரித்த போதிலும், சர்வதேச விமான போக்குவரத்துக்கு இன்னும் தடை நீடிக்கிறது... சில குறிப்பிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அந்த நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகள்
இதற்கு பிறகு தற்போது வைரஸ் பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், வெளிநாடு பயணிகள் இந்தியா வருவதை அனுமதிக்குமாறு பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்தபடி இருந்தன. இதனைத் தொடர்ந்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், மத்திய குடும்ப நலத் துறை, சுற்றுலாத் துறை, வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டது.

சார்ட்டர் விமானம்
இதில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய விசா வழங்கப்படும் என்றும் வரும் 15-ம் ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. சார்ட்டர் விமானம் தவிர மற்ற விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நவம்பர் 15 முதல் சுற்றுலா விசா வழங்கப்பட உள்ளது.

நெறிமுறைகள்
இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதேசமயம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், அவர்களை அழைத்து வரும் விமான நிறுவனங்களும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. சுமார் ஒன்றரை வருடத்துக்கு பிறகு வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications