36 மணி நேரம்..கட்டிட இடிபாட்டில் குடும்பத்தை காப்பாற்றிய 3 தக்காளிகள்! அதிசயித்து போன டெல்லி போலீஸ்
டெல்லி: டெல்லியில் புராரி பகுதியில் நான்கு மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் ஐந்து பேர் பலியான நிலையில், இடிபாடுகளில் சிக்கி இருந்த 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 36 மணி நேரத்திற்கு பிறகு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். மூன்று தக்காளிகளை வைத்து 36 மணி நேரம் பசியை சமாளித்து உயிர் பிழைத்த அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரியில் கௌஷிக் என்கிளேவ் என்ற பெயரில் புதிதாக நான்கு மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. கடந்த திங்கட்கிழமை அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த நிலையில் அருகில் வசித்த வீடுகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 20 பேர் சிக்கிக் கொண்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் பொக்லைன், ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்றது.
இடுபாடுகளில் சிக்கி 7 வயது சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். 21 பேர் சிக்கி இருந்த நிலையில் 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். சாதனா, ராதிகா,அனில் குப்தா, சர்ப்ராஸ், காதர் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் உயிருடன் மீட்கப்பட்ட பலர் படுகாயங்கள் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அந்த நான்கு பேரும் 36 மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ராஜேஷ், அவரது மனைவி கங்கோத்ரி, மகன்கள் பிரின்ஸ், ரித்திக் ஆகியோர் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.
வீட்டில் குழந்தைகளுக்காக உணவு சமைத்த போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்து அவர்கள் ஈடுபாடுகளில் சிக்கி இருக்கின்றனர். ஒரு சிமெண்ட் ஸ்லாப் கேஸ் சிலிண்டர் மீது விழுந்ததில் அந்த இடிபாட்டில் அவர்கள் நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக பதுங்கி உயிர் தப்பி இருக்கின்றனர்.
விபத்து குறித்து கூறிய ராஜேஷ்," சுமார் மாலை 6:00 மணி அளவில் கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில் தங்கள் மீது கட்டிட இடுபாடுகள் விழுந்த போது எவ்வளவு முயற்சித்தும் மீள முடியவில்லை. கடவுளிடம் தங்கள் முடிவை விட்டுவிட்ட நிலையில் அவர்தான் எங்களை காப்பாற்றினார். 36 மணி நேரத்தில் வீட்டில் சிதறி கிடந்த மூன்று தக்காளிப் பழங்களை மட்டுமே சாப்பிட்டு நாங்கள் உயிருடன் இருக்கிறோம். அந்த மூன்று தற்காலிகள்தான் எங்கள் பசியை தீர்த்து இருக்கிறது. கடவுளின் கருணையால் நாங்கள் நான்கு பேரும் காப்பாற்றப்பட்டுள்ளோம். கடவுளுக்கு நன்றி என உணர்ச்சி பொங்க கூறி இருக்கிறார் ராஜேஷ்.
தற்போது மீட்கப்பட்டுள்ள அவர்கள் 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டட இடுப்பாடுகளில் மொத்தம் 21 பேர் சிக்கிய நிலையில் 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications