"அதிகாலையில் சூழ்ந்த கும்பல்.." மணிப்பூரில் சுதந்திர போராட்ட வீரரின் மனைவி உயிருடன் எரித்து கொலை
டெல்லி: மணிப்பூர் வன்முறை கடந்த இரண்டு மாதங்களாகப் பல வன்முறைச் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், இதில் சுதந்திரப் போராட்ட வீரரின் 80 வயது மனைவியும் உயிருடன் எரிக்கப்பட்ட ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மிக மோசமான சம்பவங்கள் பல நடந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கே பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக அழைத்து வரப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர்.

இது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் சாடி வருகின்றனர். இதற்கிடையே அதேபோல மற்றொரு மோசமான சம்பவம் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
மணிப்பூர் வன்முறை: இதற்கிடையே மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக நடந்த கற்பனை செய்ய முடியாத திகில் சம்பவங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகி வருகிறது. அப்படியொரு மிக மோசமான சம்பவம் குறித்து இப்போது தகவல் வெளியாகியுள்ளது. அங்கே காக்சிங் மாவட்டத்தின் செரோவ் கிராமத்தில், சுதந்திரப் போராட்ட வீரரின் 80 வயது மனைவி உயிருடன் கொளுத்தப்பட்டுள்ளார்.
வீட்டைச் சுற்றி வளைத்த கும்பல் வீட்டிற்குள் அவரை அடைத்து வைத்து தீ வைத்துக் கொளுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த பெண்ணின் கணவர் மறைந்த எஸ் சுராசந்த் சிங் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்... அவரை முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் கவுரவித்தும் உள்ளார். அவரது மனைவியைத் தான் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த மே 28ஆம் தேதி அதிகாலை நேரத்தில் நடந்துள்ளது.
எங்கே நடந்தது: செரோ கிராமத்தில் வன்முறை தொடங்கியது முதலே துப்பாக்கிச் சூடும் வன்முறையும் தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறை எல்லாம் தொடங்குவதற்கு முன்பு செரோ கிராமம் என்பது மாநிலத் தலைநகர் இம்பாலில் இருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமமாக அது இருந்தது. ஆனால், இப்போது அங்கே எரிந்த வீடுகளும், சுவர்களில் குண்டு துளைகளும் மட்டுமே இருக்கிறது.. கடந்த இரண்டு மாதங்களாக அங்கு நடக்கும் வன்முறையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றாக இது இருக்கிறது.
கடந்த மே மாதம் வன்முறை கும்பல் ஒன்று இந்த கிராமத்தைத் தாக்கியுள்ளனர். அங்கு வசித்து வந்த சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவியான 80 வயதான இபெடோம்பி தங்கியிருந்த வீட்டை வெளியே பூட்டி இவர்கள் தீ வைத்துள்ளனர். அவரது குடும்பத்தினர் காப்பாற்ற வருவதற்குள் தீ முற்றிலுமாக வீட்டை நாசம் செய்துவிட்டதாக உயிரிழந்த இபெடோம்பியின் பேரன் பிரேம்காந்தா தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அந்த கும்பல் மிக மோசமாக நடந்து கொண்டது. அதிகாலை 2 மணியளவில் கிராமத்தில் புகுந்து சரமாரியாகத் தாக்கினர். அனைத்தையும் அடித்து நொறுக்கினர். அப்போது அந்தத் தாக்குதலில் இருந்து நான் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்தேன்.. எனது பாட்டியைக் காப்பாற்ற வந்த போது என்னை நோக்கியும் சுட்டார்கள். இதில் தோட்டாக்கள் எனது கை மற்றும் தொடையில் கூட பாய்ந்தன.
அவர்கள் எங்களைத் தாக்க வந்த போது.. பாட்டி தான் முதலில் எங்களிடம் வந்தார். எங்காவது சென்றுவிட்டு சில மணி நேரம் கழித்து வரும்படி கூறினார். அவரால் வேகமாக எங்களுடன் வர முடியாது என்பதால் எங்களை அங்கிருந்து சென்றுவிடும்படி வலியுறுத்தினார். வன்முறையாளர்கள் சென்ற பிறகு 'வந்து அழைத்துச் செல்லும்படி அவர் என்னிடம் கூறினார். துரதிர்ஷ்டவசமாக அதுவே அவரது கடைசி வார்த்தைகளாக மாறிப் போனது.. காலை 5.30 மணியளவில் அங்குச் சென்ற போது வீடு அழிந்து இருந்தது" என்றார்.












Click it and Unblock the Notifications