தீவிரவாத கூடாரம் மொத்தமாக காலி! ஆபரேஷன் சிந்தூரில் இந்த 9 இடங்களை இந்திய ராணுவம் தேர்வு செய்தது ஏன்?
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் "ஆபரேஷன் சிந்தூர்" திட்டத்தை இந்தியப் பாதுகாப்புப் படை இன்று நடத்தியுள்ளது. இந்த 9 இடங்களையும் இந்தியப் பாதுகாப்புப் படைகள் மிக கவனமாகத் தேர்வு செய்திருக்கிறது. இந்த 9 இடங்களை இந்தியா தேர்வு செய்ய என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பஹல்காமில் நடந்த தாக்குதல் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்த நிலையில், நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா நடத்தியுள்ளது. பாகிஸ்தானில் 5 இடங்களில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 4 இடங்கள் என 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த 9 இடங்களுக்கும் இந்தியா மீது கடந்த காலங்களில் நடந்த பயங்கரவாத ஊடுருவல்களுக்கும் தொடர்பு இருக்கிறது. மிகத் தீவிரமாக ஆய்வு செய்தே, அங்குள்ள பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், தீவிரவாதிகளைக் குறிவைக்கும் வகையில் இந்த இடங்களை இந்திய ராணுவம் தேர்வு செய்துள்ளது.
பஹவல்பூர்: ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகம்
இந்திய இன்று தாக்குதல் நடத்திய இடங்களில் முதன்மை டார்கெட் பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாப்பில் உள்ள பஹவல்பூரில் அமைந்துள்ளது. மசூத் அசார் தலைமையில் இங்கும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைமையகமாக இந்த நகரம் பரவலாக அறியப்படுகிறது. 2001 நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தற்கொலைப் படை தாக்குதல் என இந்தியாவில் நடந்த பல தாக்குதல்களுக்கு இந்த அமைப்பு காரணமாக இருக்கிறது.
முரிட்கே: லஷ்கர்-இ-தொய்பா தளம் மற்றும் பயிற்சி அளிக்கும் இடம்
லாகூரிலிருந்து வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முரிட்கே, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அதன் துணை அமைப்பான ஜமாத்-உத்-தாவா அமைப்புகளின் முக்கிய மையமாக இருந்து வருகிறது. 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள முரிட்கே பயங்கரவாத முகாமில் தான் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆயுதங்களும் வழங்கப்படுகிறது. 2008 மும்பை தாக்குதல் நடத்தியவர்கள் இங்கு தான் பயிற்சி பெற்றனர்.
கோட்லி: வெடிகுண்டு பயிற்சி மையம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லி, தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோருக்கு ஒரு முக்கிய பயிற்சி தளமாக இருக்கிறது. கடந்த காலங்களில் பல முறை இந்த இடத்தில் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாக இந்தியா கூறி வந்துள்ளது. இந்த கோட்லி மையம் 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளைத் தங்க வைக்கும் திறன் கொண்டதாகும்
குல்பூர்: ரஜோரி மற்றும் பூஞ்சில் தாக்குதல்களுக்கான மையம்
கடந்த 2023ல் நடந்த ரஜோரி தாக்குதல், 2024வ் நடந்த பூஞ்ச் தாக்குதல்களுக்கு இந்த குல்பூர் தளம் தான் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்தியப் பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் இந்திய மக்கள் மீது எப்படித் தாக்குதல் நடத்துவது என பாகிஸ்தான் தீவிரவாதிகள் இங்கு தான் பயிற்சி பெறுவதாகக் கூறப்படுகிறது.
சவாய்: காஷ்மீர் பள்ளத்தாக்கு தாக்குதல்களுடன் தொடர்புடைய தீவிரவாத முகாம்
வடக்கு காஷ்மீரில், குறிப்பாக சோன்மார்க், குல்மார்க் மற்றும் பஹல்காம் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் இந்த சவாய் மையத்தில் தான் பயிற்சி பெற்றதாகத் தகவல்கள் உள்ளன.
சர்ஜால் மற்றும் பர்னாலா: ஊடுருவலுக்குப் பயன்படும் இடங்கள்
சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள சர்ஜால் மற்றும் பர்னாலா ஆகியவை மூலமாகவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைகிறார்கள். இந்த இடத்தையும் சரியாகக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
மெஹ்மூனா: ஹிஸ்புல் முஜாஹிதீன் பதுங்கும் இடம்
சியால்கோட் அருகே அமைந்துள்ள மெஹ்மூனா முகாமை ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்த அமைப்பு தனது செல்வாக்கை இழந்து வந்தாலும் காஷ்மீருக்கு அச்சுறுத்தலாகவே இவர்கள் இருந்தனர். குறிப்பாக மெஹ்மூனா பகுதிகளில் தீவிரவாதிகள் தொடர்ந்து பயிற்சி அளித்து வந்தனர்.












Click it and Unblock the Notifications