நிர்மலா சீதாராமன் டூ வானதி சீனிவாசன்.. பாஜக தேசிய தலைவராக பெண் நியமனம்? லிஸ்ட்டில் ‛டாப்' பெயர்கள்
டெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. இன்னும் புதிய தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் தான் முதல் முறையாக பாஜகவின் தேசிய தலைவர் பதவிக்கு பெண் ஒருவரை நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த லிஸ்ட்டில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தை சேர்ந்த எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் ஆந்திராவை சேர்ந்த பாஜக எம்பி புரண்டேஸ்வரி ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாஜகவின் தேசிய தலைவராக ஜேபி நட்டா செயல்பட்டு வந்தார். அவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டது. ஜேபி நட்டாவின் பதவிக்காலம் 2023 ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அவரது பதவிக்காலம் 2024 ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

அதன்பிறகும் கூட புதிய தலைவர் தேர்வு செய்யும் வரை அவர் பாஜக தலைவராக செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ஜேபி நட்டா தான் பாஜகவின் தேசிய தலைவராக தொடர்ந்து வருகிறது. விரைவில் பாஜகவுக்கு தேசிய தலைவர் தேர்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் புதிய பாஜக தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தனித்தனியாக தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை பாஜகவின் தேசிய தலைவராக பெண்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் தான் முதல் முதலாக பெண் ஒருவரை பாஜகவின் தேசிய தலைவர் பொறுப்புக்கு தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெண் ஒருவரை பாஜக தேசிய தலைவராக நியமனம் செய்வதில் ஆர்எஸ்ஆர் அமைப்பு முழு ஆதரவு தெரிவித்துள்ளதாம். அதன்படி பாஜகவின் தேசிய தலைவர் பதவிக்கான போட்டியில் முதல் 3 இடத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆந்திரா பாஜக எம்பி புரண்டேஸ்வரி, தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆகியோர் உள்ளனர்.
இதற்கு முன்னோட்டமாக சமீபத்தில் சில விஷயங்கள் பாஜகவில் அரங்கேறி உள்ளது. அதன்படி ஜேபி நட்டாவுடன், நிர்மலா சீதாராமன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பாஜகவின் பொது செயலாளர் பிஎல் சந்தோஷ் பங்கேற்றார். இந்த ஆலோசனை கூட்டம் டெல்லியின் பாஜக தலைமையகத்தில் நடந்தது. இதனால் நிர்மலா சீதாராமனை பாஜகவின் தேசிய தலைவராக நியமிக்க மேலிடம் விரும்புவதாக கூறப்படுகிறது.
இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. நிர்மலா சீதாராமனை பாஜக தேசிய தலைவராக நியமிக்கும்போது அது பாஜகவை தென்இந்தியாவில் வளர்க்க உதவும். குறிப்பாக நிர்மாலா சீதாராமன் தமிழகத்தில் பிறந்தவர். ஆந்திராவில் திருமணம் செய்துள்ளார். கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாகி உள்ளார். இதுதவிர அண்டை மாநிலங்களான தெலுங்கானா, கேரளாவிலும் நிர்மலா சீதாராமனால் திறம்பட செயல்பட முடியும் என்று பாஜக மேலிடம் நம்புகிறது. அதுமட்டுமின்றி லோக்சபாவில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் பாஜக நடவடிக்கைக்கு அவரது நியமனம் வலு சேர்க்கும் என்று பாஜக மேலிடம் நம்புகிறது.












Click it and Unblock the Notifications