பதவி ஏற்றதும்.. ஜெய்பீம் என்று முழக்கமிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய்.. யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

புதுடெல்லி: 51 வது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி ஆர் கவாய் பதவியேற்றுள்ளார். இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியும், முதல் பௌத்த நீதிபதியுமான நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் இந்திய நீதித்துறையில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இன்று பதவி ஏற்றதும் வழக்கறிஞர்களை பார்த்து.. சட்டத்தை இயற்றிய அண்ணல் பி.ஆர் அம்பேத்கரை நினைவு கூறும் விதமாக பி.ஆர் கவாய்.. ஜெய்பீம் என்று முழக்கமிட்டார்.. நீண்ட நீதித்துறை பின்புலம் கொண்ட இவரை பற்றி இங்கே பார்க்கலாம்!

கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு இந்திய நீதித்துறைக்கு தலைமை தாங்கும் இரண்டாவது தலித் நீதிபதி கவாய். இவரின் பதவிக்காலம் நவம்பர் 23, 2025 அன்று முடிவடையும். ஆறு மாத காலத்திற்கு இவர் நீதிபதியாக இருப்பார். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதியாக இவர் அரசியலமைப்பு பிரச்சினைகள், தனிமனித சுதந்திரம் மற்றும் அதிகாரம் தொடர்பான பல முக்கிய தீர்ப்புகள் உட்பட சுமார் 400+ தீர்ப்புகளை வழங்கி உள்ளார்.

Supreme Court

தலைமை நீதிபதி கவாய், மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். இன்று குடியரசுத் தலைவரின் இல்லத்தில் பதவியேற்ற பிறகு அவர் தனது தாயின் கால்களைத் தொட்டு வணங்கினார். நவம்பர் 24, 1960 அன்று அமராவதியில் பிறந்த இவர், இந்திய குடியரசுக் கட்சியை (கவாய்) தொடங்கிய அரசியல்வாதியான ஆர்.எஸ். கவாயின் மகனாவார்.

மே 24, 2019 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற நீதிபதி கவாய், பிரிவு 370, தேர்தல் பத்திரங்கள் ரூ.1,000 மற்றும் ரூ.500 நாணயம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு என்று பல்வேறு வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கி உள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில்.. நீதிபதி எஸ்ஏ நசீர், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்ரமணியன் ஆகிய நான்கு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தெரிவித்தனர்.

ஒரு பெண்ணின் மார்பகங்களைப் பிடித்து அழுத்துவது, அவளது "பைஜாமா"வின் கயிறுகளை இழுப்பது பாலியல் பலாத்காரத்திற்கு சமமானதல்ல என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கருத்துக்களுக்கு நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு தடை விதித்தது. கண்டனமும் தெரிவித்தது. இது மனிதாபிமானமற்ற அணுகுமுறை என்று கவாய் அமர்வுதான் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது.

முக்கிய தீர்ப்புகள்

கடந்த ஆறு ஆண்டுகளில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில், அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டம், சிவில் மற்றும் குற்றவியல் சட்டம், வணிக தகராறுகள், நடுவர் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பாடங்கள் தொடர்பான விஷயங்களைக் கையாளும் சுமார் 700 அமர்வுகளில் இவர் உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.

பல்வேறு பிரச்சினைகள் குறித்த அரசியலமைப்பு அமர்வு தீர்ப்புகள் உட்பட சுமார் 300 தீர்ப்புகளை அவர் எழுதியுள்ளார். தலைமை நீதிபதியாக பதவி ஏற்று உள்ள நீதிபதி கவாய், உச்ச நீதிமன்றத்தில் 81,000க்கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகளின் எதிர்காலத்தை முடிவு செய்பவர். அதிகம் விவாதிக்கப்பட்ட வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025க்கு எதிரான வழக்குகளை இவரின் பென்ச்தான் விசாரிக்க போகிறது.

தலைமை நீதிபதியாக பதவியேற்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, நீதிபதி கவாய் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் மேற்கொண்ட உரையாடலில், அரசியலமைப்புச் சட்டம் மிக உயர்ந்தது என்று கூறினார். ஓய்வுக்குப் பிறகு எந்தப் பணிகளையும் தான் ஏற்கப் போவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். 2023 டிசம்பரில், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவின் விதிகளை ரத்து செய்வதற்கான மத்திய அரசின் முடிவை ஒருமனதாக உறுதி செய்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வில் அவர் ஒரு பகுதியாக இருந்தார். அரசியல் நிதியுதவிக்கான தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய அமர்விலும் நீதிபதி கவாய் ஒரு பகுதியாக இருந்தார்.

பட்டியல் சாதிகளுக்குள் உட்பிரிவை உருவாக்க மாநில அரசுகளுக்கு அரசியலமைப்பு ரீதியாக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்ற தீர்ப்பை வழங்கிய 7 பேர் அமர்விலும் அவர் இருந்தார். சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய சாதிகளின் மேம்பாட்டிற்காக இடஒதுக்கீடு வழங்க வசதியாக இந்த தீர்ப்பு அமைந்தது.

அதேபோல் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் சொந்த கருத்துகளை தெரிவிக்க கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது, அது அவர்களின் உரிமையை பறிக்கும் , மாறாக ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரலாம் என்ற தீர்ப்பையும் இவர் வழங்கி உள்ளார். அதேபோல் நாடு முழுக்க எந்த ஒரு கட்டிடமும் 15 நாட்கள் நோட்டீஸ் இல்லாமல் இடிக்கப்பட கூடாது என்று புல்டோசர் தொடர்பான வழக்கில் உத்தரவிட்டார். உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் சட்டத்தை பின்பற்றாமல் புல்டோசர் அனுப்பும் கலாச்சாரத்தை தொடங்கி வைத்ததற்கு எதிரான மனுக்களில் இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்தார்.

எப்படி பதவிக்கு வந்தார்?

நீதிபதி கவாய், கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைப்புகளில் பல்வேறு அரசியலமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து விரிவுரைகளை வழங்கியுள்ளார்.

நவம்பர் 14, 2003 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக அவர் பதவி உயர்வு பெற்றார். நவம்பர் 12, 2005 அன்று உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். மார்ச் 16, 1985 அன்று அவர் வழக்கறிஞர் சங்கத்தில் சேர்ந்தார் மற்றும் நாக்பூர் நகராட்சி, அமராவதி நகராட்சி மற்றும் அமராவதி பல்கலைக்கழகத்தின் நிலையான ஆலோசகராக இருந்தார். ஆகஸ்ட் 1992 முதல் ஜூலை 1993 வரை பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் உதவி அரசு வழக்கறிஞராகவும் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார். ஜனவரி 17, 2000 அன்று நாக்பூர் பெஞ்சில் அரசு வழக்கறிஞராகவும் அரசு வழக்கறிஞராகவும் நீதிபதி கவாய் நியமிக்கப்பட்டார். அவருக்கு முன்னோடியாக இருந்த சஞ்சீவ் கன்னா ஏப்ரல் 16 அன்று அடுத்த தலைமை நீதிபதியாக மத்திய நீதிபதி கவாயின் பெயரை பரிந்துரைத்தார். ஏப்ரல் 29 அன்று சட்ட அமைச்சகம் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி கவாய் நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கை வெளியிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+