நிலவில் 'சம்பவம்' செய்த இஸ்ரோ! ஜி20 மாநாட்டில் எதிரொலித்த சந்திரயான் 3 வெற்றி.. உலக நாடுகள் வாழ்த்து
டெல்லி: நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்துள்ள நிலையில், ஜி20 உறுப்பு நாடுகள் இந்த சாதனைக்கு இந்தியாவுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் சந்திரயான் 3 வெற்றிக்காக இந்தியாவுக்கு ஜி20 நாடுகள் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளன. இந்தியாவில் முதன் முறையாக ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இது தவிர சிறப்பு அழைப்பாளர்களாக வங்கதேசம், எகிப்து, மொரிசியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. உலகின் மிகவும் வலிமை வாய்ந்த நாடுகளாக உள்ள இந்த இரண்டு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டை புறக்கணித்திருப்பது இந்தியாவுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தது.
இருப்பினும் மற்றொருபுறம் பிரிட்டன் அதிபர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் நேற்றே இந்தியா வந்து சேர்ந்தனர். இதனையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் மாநாடு தொடங்கியது. தற்போது மாநாட்டில் ஒவ்வொரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சந்திரயான் 3 வெற்றிக்காக இந்தியாவுக்கு ஜி20 நாடுகள் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications