எல்லாமே கன கச்சித பிளான்.. நள்ளிரவில் அலற விட்ட இந்தியா! ராஜ்நாத் சிங் அப்படி சொன்ன அடுத்த 2 நாளில்!
டெல்லி: இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சபதம் எடுத்த 2 நாளில், இந்தியா பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளது. நீங்கள் விரும்புவது நிச்சயம் நடக்கும் என ராஜ்நாத் சிங் கூறி இருந்த நிலையில் நள்ளிரவில் ஆட்டத்தை நடத்தி முடித்துள்ளது இந்திய ராணுவம்.
போர்க்கால ஒத்திகை என்று பாகிஸ்தான் கவனத்தை திசை திருப்பி, ஆபரேஷன் சிந்தூரை கன கச்சிதமாக நிறைவேற்றி உள்ளது இந்திய ராணுவம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தி இருக்கிறது.

ராஜ்நாத் சிங் ஆலோசனை
ஆபரேஷன் சிந்தூர் காரணமாக பாகிஸ்தான் நிலைகுலைந்து போயிருக்கும் இந்த நேரத்தில், சிந்தூர் ஆபரேஷனின் தற்போதைய நிலை, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்ச்சியாக பாகிஸ்தான் மேற்கொள்ள இருக்கும் எதிர்வினையை முறியடிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் மிகவும் கவனமாக இருந்து வருகிறது.
ராஜ்நாத் சிங் சொன்ன வார்த்தை
கடந்த 2 நாட்களுக்கு முன்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "நமது நாட்டைத் தாக்கத் துணிபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு. பிரதமர் நரேந்திர மோடியின் பணி தர்மம் மற்றும் விடாமுயற்சியை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நீங்கள் விரும்புவது நிச்சயமாக நடக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.
இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர்களை மட்டுமல்ல, திரைக்குப் பின்னால் அமர்ந்து இந்திய மண்ணில் இதுபோன்ற கொடூரமான செயல்களைச் செய்ய சதித் திட்டம் தீட்டியவர்களையும் நாங்கள் விடமாட்டோம். பாதுகாப்பு அமைச்சராக, வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவதும், நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதும் எனது பொறுப்பு" எனத் தெரிவித்து இருந்தார்.
ஆபரேஷன் சிந்தூர்
இந்நிலையில் தான், இன்று நாடு முழுவதும் 244 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், நள்ளிரவு 1.44 மணியளவில் பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா (LeT), ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புகளின் 9 இடங்களை இந்திய ராணுவத்தினர் குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டு, முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
கன கச்சித பிளான்
ஆக, இந்த ஆபரேஷன் சிந்தூர் திடீரென திட்டமிடப்பட்டது அல்ல. பிரதமர் மோடி, முப்படைகளுக்கும் ஃப்ரீ ஹேண்ட் கொடுத்தது தொடங்கி, இந்திய விமானப்படை தளபதி உள்ளிட்டோர் பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியாக போர் ஒத்திகை அறிவிக்கப்பட்டது.
போர் ஒத்திகை அறிவிப்பு பரபரப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது சல்லடை போட்டு தாக்குதல் நடத்தி கதிகலங்க வைத்துள்ளது இந்தியா. இந்தியாவின் இந்த பதில் தாக்குதல் தீவிரவாத கும்பலை நிலைகுலையச் செய்துள்ளது. இந்திய ராணுவத்தின் ஆபரேஷனை பொதுமக்கள் வரவேற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications