கோவாவில் தனிப்பெரும் கட்சியாகும் பாஜக.. கிட்ட வரும் காங்.! கிங் மேக்கர் யார்? ஏபிபி- சிவோட்டர் சர்வே
டெல்லி: மொத்தம் 50 சட்டசபை இடங்களைக் கொண்ட கோவா மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்று ஏபிபி- சிவோட்டர் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மிகச் சிறிய மாநிலமான கோவாவில் கடந்த பிப். 14ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. கோவா தேர்தலில் அதிகபட்சமாக 81.21% வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

பெரும்பான்மை இல்லை
இதில் கோவா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க ஒரு கட்சி 21 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே ஏபிபி- சிவோட்டர் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பாஜக 13 முதல் 17 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு கடும் போட்டி தருகிறது. கோவாவில் காங்கிரஸ் 12 முதல் 16 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக ஏபிபி- சிவோட்டர் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல திரிணாமுல் கூட்டணி 5 முதல் 9 இடங்களிலும் ஆம் ஆத்மி 4 முதல் 8 இடங்களிலும் வெல்லும் என ஏபிபி- சிவோட்டர் தெரிவித்துள்ளது.

கிங்க மேக்கர்
கோவா மாநிலத்தில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்பதால், ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் கிங் மேக்கராக உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் சார்பில் வெல்லப்போகும் உறுப்பினர்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அந்தக் கட்சி ஆட்சியை அமைக்கும் என்றும் ஏபிபி- சிவோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவா
நாட்டிலேயே மிகச் சிறிய மாநிலமான கோவாவில் மொத்தம் 40 சட்டசபை இடங்கள் உள்ளன. கோவாவில் கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் போட்டி உள்ளது. கடந்த 2017இல் நடைபெற்ற தேர்தலில் 17 இடங்களைப் பெற்று காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் அக்கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை அமைத்தது. டெல்லி காங்கிரஸ் தலைமை துரிதமாகச் செயல்படாமல் போனதா இதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது.

பாஜக vs காங்கிரஸ்
அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில், அதாவது 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாபு காவ்லேகர் தலைமையில் மொத்தம் இருந்த 17 எம்எல்ஏக்களில் 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அப்படியே பாஜக பக்கம் தாவினர். இதையடுத்து பாபு காவ்லேகர் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டார். இதனால் மக்கள் காங்கிரஸ் கட்சி மீது பெரிதும் நம்பிக்கை இழந்தனர். இதனால் வாக்கெடுப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர், காங்கிரஸ் வேட்பாளர்கள் வென்ற பின்னர் கட்சி மாற மாட்டோம் எனக் கடவுள் முன் சத்தியம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த முறை தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் கடும் போட்டி இருக்கும் என்றே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications