கோவாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை.. எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள்! நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்
டெல்லி: கோவா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாக நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே மிகச் சிறிய மாநிலமான கோவா மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் ஒரு கட்சி ஆட்சி அமைக்கக் குறைந்தது 21 இடங்களில் வெல்ல வேண்டும்
கோவா மாநிலத்தில் கடந்த பிப். 14ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் மொத்தம் 78.94% வாக்குகள் பதிவாகி இருந்தன.

தொங்கு சட்டசபை
கோவா மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கோவாவில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாக நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளது, இருப்பினும் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போலில் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பாஜக 17-19 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எங்கே
அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 11-13 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 21 தொகுதிகளில் வெல்ல வேண்டும். கோவாவில் ஆம் ஆத்மி கிங் மேக்கராக உருவெடுக்க வாய்ப்புள்ளது. அங்கு ஆம் ஆத்மி 1-4 இடங்களில் வெல்லும் என்று நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல் கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து இதர கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 2-7 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக்கத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவா
நாட்டிலேயே மிகச் சிறிய மாநிலமான கோவாவில் மொத்தம் 40 சட்டசபை இடங்கள் உள்ளன. கோவாவில் கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் போட்டி உள்ளது. கடந்த 2017இல் நடைபெற்ற தேர்தலில் 17 இடங்களைப் பெற்று காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் அக்கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை அமைத்தது. டெல்லி காங்கிரஸ் தலைமை துரிதமாகச் செயல்படாமல் போனதா இதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது.

பாஜக vs காங்கிரஸ்
அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில், அதாவது 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாபு காவ்லேகர் தலைமையில் மொத்தம் இருந்த 17 எம்எல்ஏக்களில் 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அப்படியே பாஜக பக்கம் தாவினர். இதையடுத்து பாபு காவ்லேகர் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டார். இதனால் மக்கள் காங்கிரஸ் கட்சி மீது பெரிதும் நம்பிக்கை இழந்தனர். இதனால் வாக்கெடுப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர், காங்கிரஸ் வேட்பாளர்கள் வென்ற பின்னர் கட்சி மாற மாட்டோம் எனக் கடவுள் முன் சத்தியம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த முறை தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் கடும் போட்டி இருக்கும் என்றே கூறியிருந்தது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications