மகிழ்ச்சி தகவல்.. இந்தியாவில் கொரோனா இரட்டிப்பாகும் வேகம் குறைகிறது! குணமடைவோர் எண்ணிக்கையும் உயர்வு
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரட்டிப்பாகும் வேகம் 17.4 நாட்கள் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது ஆறுதல் அளிக்கக் கூடிய செய்தியாகும். இரண்டு வாரங்களுக்கு முன்பு இது 15.4 நாட்கள் என்ற அளவில் இருந்தது.
ஒரு பக்கம், தினம் தினம் பாதிப்புகளின் எண்ணிக்கை புது உச்சம் தொட்டு வருகிறது. இன்று முதல் முறையாக, 24 மணி நேரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது.
இருப்பினும், இரட்டிப்பு வேகம் என்பது குறைகிறது. மார்ச் 25ஆம் தேதி 3.4 நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இரட்டிப்பு அளவை எட்டிக் கொண்டிருந்தது.

இரட்டிப்பு
அப்போதுதான், கொரோனா பாதிப்பை குறைக்க லாக்டவுன் அறிமுகம் செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்காக உயர்வதைத்தான், இரட்டிப்பு என்று புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. பாதிப்பின் மொத்த எண்ணிக்கை அதிகரிக்கும்போது அது இரட்டிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடிய கால அளவு குறைகிறது என்பதை 17.4 நாட்கள் என்ற புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது. இது ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய செய்தி.

ஆய்வுக் கூட்டம்
கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வரக்கூடிய நிலையில், மத்திய அமைச்சரவை செயலாளர் அனைத்து தலைமை செயலாளர்கள், சுகாதாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர்கள் உடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த ஆலோசனையின் போது கண்டைன்மெண்ட் பகுதிகளில் அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. பரிசோதனை மற்றும் நோயாளிகள் அவர்களை சார்ந்தவர்களை கண்டறிதலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய ஆலோசனை
கண்டைன்மெண்ட் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பரிசோதனை நடத்த வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அமைச்சரவை செயலாளர் கேட்டுக்கொண்டார். போதிய அளவுக்கு பரிசோதனை உபகரணங்கள் இருப்பு வைக்க வேண்டும், போதிய அளவுக்கு மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீடு திரும்புவோர் அதிகரிப்பு
இரட்டிப்பாக கூடிய விகிதம் குறைந்து உள்ளது என்பதோடு குணமடைந்து வீடு திரும்புவார் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது மற்றொரு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். குணமடைந்து வீடு திரும்பும் விகிதம் என்பது 49.47 என்ற அளவில் இருக்கிறது. ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 194 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 842 நோயாளிகள் சிகிச்சை பெற்று கொண்டு இருக்கிறார்கள்.

பரிசோதனைகள் அதிகரிப்பு
எனவே சிகிச்சை பெறுபவர்களை விடவும் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 166 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியா முழுக்க ஐசிஎம்ஆர் அனுமதியுடன் 877 பரிசோதனை மையங்கள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இதில் 637 அரசுக்கு சொந்தமானது ஆகும். பரிசோதனைகள் அதிகரித்துள்ளபோதிலும், கொரோனா இரட்டிப்பு வேகம் குறைந்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.












Click it and Unblock the Notifications