மத்திய அரசு பணிகளுக்கு நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் அறிவிப்பு ரத்து.. மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் முறையை மத்திய அரசு அறிவித்து இருந்தது. இது குறித்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், இதை ரத்து செய்யுமாறு யுபிஎஸ்சி அமைப்பிற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதி இருக்கிறார்.
மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் முறையை மத்திய அரசு அறிவித்து இருந்தது. இருப்பினும், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளும் என்டிஏ கூட்டணியில் கூட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நேரடி நியமனம் ரத்து: இதற்கிடையே மத்திய அரசின் பணிகளுக்கு நேரடி நியமனம் என்ற அறிவிப்பு ரத்து என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.. இந்த நேரடி நியமன நடவடிக்கையை நிறுத்தி வைக்க யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம் மத்திய அரசில் பணியாற்ற நேரடியாக மூத்த அதிகாரிகள் 45 பேரை நியமிக்கும் முறை ரத்து செய்யப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவை மேற்கோள் காட்டி ஜிதேந்திர சிங், யுபிஎஸ்சி தலைவர் ப்ரீத்தி சுடானுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு அவசியம் எனப் பிரதமர் கூறியுள்ளார் என்றும் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நேரடி நியமன நடைமுறை இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடியைப் பொறுத்தவரை, வரலாற்று அநீதிகளை நிவர்த்தி செய்வதற்கும், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் சமூக நீதியை உறுதி செய்யவே அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இட ஒதுக்கீடு: மத்திய அரசு வெளியிட்டு இருந்த அறிவிப்பில் இட ஒதுக்கீடு இல்லை என்று ராகுல் காந்தி விமர்சித்திருந்த நிலையில், ஜிதேந்திர சிங் இந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளார். மேலும் அவர் தனது கடிதத்தில், "இந்தப் பணியிடங்கள் சிறப்புப் பணிகளாகக் கருதப்படுகின்றன. இதன் காரணமாகவே இந்த நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை" என்று கூறியுள்ளார்.

பின்னணி என்ன: கடந்த வாரம் 45 இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் காலியிடங்களை நிரப்ப யுபிஎஸ்சி விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்தது. வழக்கமாக ஐஏஎஸ் அதிகாரிகளே இந்த பொறுப்புகளில் நியமிக்கப்படுவார்கள். ஆனால், தனியார் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை நியமிக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.
இந்த முறையை ஆங்கிலத்தில் LATERAL ENTRY என்கிறார்கள். அதாவது வழக்கமான மத்திய அரசுப் பணியாளர்களை நியமிப்பதற்குப் பதிலாகத் தனியார் துறையில் இருந்து நிபுணத்துவம் பெற்றவர்கள் நேரடியாக உயர் பதவிகளில் பணியமர்த்தப்படுவார்கள். இருப்பினும், இந்த அறிவிப்பு வந்தது முதலே எதிர்க்கட்சிகள் இதை மிகக் கடுமையாக விமர்சித்தன.
கடும் எதிர்ப்பு: எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தான் இந்த விவகாரத்தில் பாஜகவை முதலில் கடுமையாகச் சாடினார். இந்த லேட்ரல் என்ட்ரி மூலம் செய்யப்படும் நியமனங்களில் இட ஒதுக்கீடு இல்லை என்பதைக் குறிப்பிட்டு விமர்சித்தார். இது தலித்துகள், ஓபிசிகள் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதல் என்று விமர்சித்த அவர், அரசியலமைப்பை அழிக்கவும், இட ஒதுக்கீடுகளைப் பறிக்கவும் மோடி அரசு முயல்வதாக விமர்சித்தார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி என்டிஏ கூட்டணியில் உள்ள ஜேடியு, எல்ஜேபி கட்சிகளும் இதை எதிர்த்தன.
மத்திய அமைச்சர்கள்: அதேநேரம் பாஜக அமைச்சர்கள் இந்தத் திட்டம் சரியானது என்றே கூறி வந்தனர். 1970கள் முதலே காங்கிரஸ் ஆட்சியில் பல முறை இதுபோன்ற நியமனங்கள் நடந்துள்ளதாக மத்திய அமைச்சர்கள் குறிப்பிட்டனர். குறிப்பாக 1976ல் மன்மோகன் சிங் கூட இந்த லேட்ரல் என்ட்ரி மூலமாகவே நிதிச் செயலாளராக ஆக்கப்பட்டதாகச் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியிருந்தார். இருப்பினும், என்டிஏ கூட்டணியிலேயே இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் இந்த முடிவை மத்திய அரசு இப்போது ரத்து செய்துள்ளது.












Click it and Unblock the Notifications