அப்பப்போ மாநிலம் டூ மாநிலம் டிரான்ஸ்பர்.. மீண்டும் மீண்டும் வாகன பதிவா.. மத்திய அரசின் தீர்வு இதோ
டெல்லி: ராணுவ வீரர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் உள்ளிட்டோரின் சொந்த வாகனங்களை பதிவு செய்ய அந்தந்த மாநில பதிவு எழுத்துகளுக்கு பதிலாக பொதுவான பாரத் (BH) எனும் பதிவு எழுத்தை பயன்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ராணுவ ஊழியர்கள், மத்திய மாநில அரசு அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர் சொந்த வாகனங்கள் வைத்திருந்தால் அதை பணிபுரியும் மாநிலத்தில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பதிவு செய்வர். ஒரு வேளை அவர்களுக்கு இடமாறுதல் கிடைத்து வேறு மாநிலங்களுக்கு செல்ல நேரிட்டால் வேறு வாகன பதிவு எண்ணுடன் 12 மாதங்களுக்கு அவர்கள் அந்த வாகனத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

எனவே அந்த 12 மாதத்திற்குள் வண்டியின் உரிமையாளர் தான் பணியாற்றும் மாநிலத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக ஒரு மத்திய அரசு அதிகாரி தமிழகத்தில் தனது காரையோ இரு சக்கர வாகனத்தையோ பதிவு செய்கிறார் என்றால் அவரை திடீரென டெல்லிக்கு பணிமாறுதல் கொடுத்து அனுப்புகிறார்கள்.
அப்போது தமிழகத்தில் பதிவு செய்த வாகனத்தை அவர் டெல்லியில் பயன்படுத்துகிறார் என்றால் அதை தமிழக பதிவெண்ணுடன் பயன்படுத்த 12 மாதங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அதற்குள்ளாக அவர் டெல்லியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மீண்டும் அந்த மாநில பதிவு எண்ணில் பதிவு செய்திடல் வேண்டும்.
அந்த நபர் டெல்லியிலிருந்து பீகாருக்கு மாற்றப்பட்டால் அங்கு அவர் புதிதாக தனது வாகனத்தை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. இதை எளிதாக்க அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ராணுவ வீரர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் அல்லது அந்த ஊழியர் பணியாற்றும் நிறுவனம் 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களிலோ யூனியன் பிரதேசங்களிலோ இருந்தால் அவர்கள் தங்கள் வாகனத்தை பிஎச் பாரத் எனும் வரிசையில் பதிவு செய்து கொள்ளலாம்.
இதனால் அவர்களுக்கு பணிமாறுதல் கிடைத்தாலும் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் அந்த வாகனத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பாரத் சீரிஸை கொண்டு பதிவு செய்தால் வேறு எந்த மாநிலம் சென்றாலும் அவர்கள் புதிதாக மீண்டும் பதிவு செய்ய வேண்டியதில்லை.
வாகனங்களை பிஎச்சில் பதிவு செய்ய இரு ஆண்டுகளுக்கு சேர்த்து அவர்கள் சாலை வரியை செலுத்த வேண்டும். இது முழுக்க முழுக்க ஆன்லைனில் பதிவு செய்யப்படும். ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதலில் IN எனும் பெயரை பயன்படுத்த சாலை மற்றும் போக்குவரத்து துறை முடிவு செய்திருந்தது. அந்த பெயரை தற்போது பாரத் என மாற்றியுள்ளது.
பிஎச் சீரிஸ் வாகனங்களுக்கு வாகன விலை ரூ 10 லட்சம் இருந்தால் 8 சதவீத சாலை வரியும், 10 முதல் 20 லட்சம் வரை இருந்தால் 10 சதவீத சாலை வரியும் 20 லட்சத்திற்கு மேல் இருந்தால் 12 சதவீத சாலை வரியும் செலுத்தலாம் என அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. டீசல் வாகனங்கள் ன்றால் 2 சதவீதம் கூடுதல் வரியும், இதே எலக்ட்ரிக் வாகனங்கள் என்றால் 2 சதவீதம் வரி குறைத்தும் செலுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications