பெரிய ஆக்சன்! ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு 'ஷாக்' நியூஸ்.. மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
டெல்லி: நீதிமன்றங்களின் உத்தரவுக்கு இணங்க, 60-க்கும் மேற்பட்ட ஆபாச வலைதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்படுவதாக இந்த வலைதளங்கள் மீது புகார்கள் வந்ததை அடுத்து, அவை முடக்கப்பட்டுள்ளன.
இன்னும் பல ஆபாச வலைதளங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்
இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. கடந்த காலங்களை காட்டிலும் இதுபோன்ற குற்றங்கள் தற்போது திடீரென அதிகரிப்பதற்கு என்ன காரணம் என இந்தியாவில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அளித்த வாக்குமூலம்; மனநல மருத்துவர்களின் கருத்துகள் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஆபாசப் படங்களே இதுபோன்ற குற்றங்கள் அதிகரிக்க காரணம் எனத் தெரியவந்தது.

ஆபாச வலைதளங்கள் முடக்கம்
இதையடுத்து, இந்த ஆபாச வலைதளங்களை முடக்கக் கோரி கடந்த 2015-ம் ஆண்டு காலக்கட்டத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் பல அமைப்புகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இருந்தபோதிலும், தொழில்நுட்பம் சார்ந்த நடைமுறை சிக்கல்கள் காரணமாக இதுபோன்ற ஆபாச வலைதளங்களை முடக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை நீதிமன்றங்களில் மத்திய அரசே தெரிவித்தது. பின்னர், அதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டதன் பேரில் ஆபாச வலைதளங்களை முடங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியது. அதன்படி, 800-க்கும் மேற்பட்ட ஆபாச வலைதளங்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியது.

நீதிமன்றங்கள் உத்தரவு
இருந்தபோதிலும், மேலும் பல ஆபாச வலைதங்கள் இணையதளத்தில் இயங்கி வந்தன. அதுபோன்ற இணையதளங்களை இந்தியாவில் ஏராளமானோர் பார்ப்பதும் தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, அந்த வலைதளங்களையும் முடக்குமாறு உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் மற்றும் புணே செஷன்ஸ் நீதிமன்றங்களில் பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை கடந்த 2018-ம் ஆண்டு விசாரித்த உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் 4 ஆபாச வலைதளங்களை முடக்க உத்தரவிட்டது. அதேபோல, புணே செஷன்ஸ் நீதிமன்றம் 63 ஆபாச வலைதளங்களை முடக்க ஆணையிட்டது.

67 ஆபாச வலைதளங்கள் முடக்கம்
இந்நிலையில், நீதிமன்றங்களின் மேற்கண்ட உத்தரவுகளை செயல்படுத்தும் வகையில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் இணைய சேவை நிறுவனத்துக்கு கடந்த 24-ம் தேதி 4 கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதில், "நீதிமன்றங்களின் ஆணையின் படியும், தகவல் தொழில்நுட்ப விதிகளின் படியும் மேற்குறிப்பிட்ட 67 ஆபாச வலைதளங்கள் பெண்களின் மதிப்பை குலைக்கும் வகையில் இருக்கின்றன. எனவே இந்த ஆபாச வலைதளங்களை உடனடியாக முடக்க வேண்டும்" என அந்தக் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த 67 ஆபாச வலைதளங்களும் தற்போது முடக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications