சபாஷ்.. விவசாயக் கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
டெல்லி: நாட்டில் அடுத்த நிதியாண்டுக்கான விவசாயக் கடன் இலக்கை மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தி நிர்ணயித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். கொரோனா தொற்றில் இருந்து இந்தியா முழுவதுமாக விடுபட்டதற்கு பின்னர், மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் என்பதால் நாட்டு மக்கள் மத்தியில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள், மாத சம்பளதாரார்கள், சிறு குறு தொழில் முனைவோர் என பல்வேறு தரப்பினரும் தங்களின் பல்வேறு கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டில் நிறைவேறுமா என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடும் பாதிப்பில் விவசாயிகள்
முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த முறை வேளாண் துறை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. கொரோனா ஊரடங்கு, பொய்த்துப்போன பருவமழை, கனமழை வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு வேளாண் துறை பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் தங்கள் விளைப்பொருட்களுக்கு ஏற்ற விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே, அடுத்த பயிரிடலுக்கும், சாகுபடிக்கும் அரசு வழங்கும் கடனை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
ரூ.20 லட்சம் கோடி கடன் இலக்கு
இந்நிலையில், விவசாயிகளின் இந்த நிலைமையை கருத்தில்கொண்டு, அடுத்த நிதியாண்டில் அவர்களுக்கு கொடுக்கப்படும் கடன் இலக்கை அதிகரிக்க மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேளாண் துறைக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில், விவசாயக் கடனுக்கான இலக்காக ரூ.20 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் விவசாயக் கடன் இலக்கு ரூ.18 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2 லட்சம் கோடியை அரசு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வேளாண் துறையில் ஸ்டார்ட் அப்
மேலும், தனது பட்ஜெட் உரையின் போது வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் திட்டங்களை அறிமுகப்படுத்தப் போவதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்பட உணவுப்பொருட்களும் அதிகம் தேவைப்படுகின்றன. எனவே, உணவுப் பொருள் தேவையை பூர்த்தி செய்யவும், விவசாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் ஸ்டார்ட் அப் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வேளாண் துறையில் தொழில்முனைவோர் உருவாவது அதிகரிக்கும்.
டிஜிட்டல் தொழில்நுட்பம்
அதேபோல, விவசாயத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி, எந்தெந்த காலத்தில் என்னென்ன பயிர்களை விளைவிக்கலாம், எந்த உரங்களை பயன்படுத்தலாம், ஊடு பயிர்களாக எதை போடலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவசாயிகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஆலோசனை கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதனால் விவசாயிகள் சரியான நேரத்தில் சரியான உணவு தானியங்களை உற்பத்தி செய்து லாபம் ஈட்ட முடியும்" என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.