உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்விக் கடன்.. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு
டெல்லி: உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தார். அது மட்டும் இன்றி ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் மாணவர்களுக்கு கடன் தொகையில் 3 சதவீதத்தை வட்டி மானியமாக அரசே நேரடியாக இ-வவுச்சர்களை வழங்கும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட அது இடைக்கால பட்ஜெட்.. தற்போது லோக்சபா தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், தற்போதைய மோடி அரசு முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது.

2024 லோக்சபா தேர்தல் முடிந்து பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இந்த பட்ஜெட் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 2024 மக்களவை தேர்தலுக்கு பின் மோடி 3.0 அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படும். ஆண்டு தோறும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படும். அரசின் எந்த திட்டங்களின் கீழும் பயன்பெறாத மானவர்களுக்கு ரூ. 10 லட்சம் வரையிலான கல்விக் கடன் வழங்கப்படும்.
உள்நாட்டு கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு இந்த கடனுதவி வழங்கப்படும். அது போக மாத ஊதியம் 15 ஆயிரத்திற்கு உட்பட்டு இருந்தால் ஒரு மாத ஊதியம் அரசு வழங்கும் என்ற திட்டத்தையும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். நிர்மலா சீதாராமன் மேலும் கூறுகையில், வேலை வாய்ப்பு பெருக்கத்துடன் இணைந்த ஊக்குவிப்புக்கு 3 அம்ச திட்டம் செயல்படுத்தப்படும்.
தொழில் உற்பத்தி துறையில் முதல் முறையாக பணிக்கு சேரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சந்தாவை அரசு செலுத்தும். அனைத்து துறைகளிலும் கூடுதலாக பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு பிஎஃப் சந்தாவில் ரூ.3 ஆயிரம் அரசு செலுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications