அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்படுங்க.. ஆளுநர் தனியாக முடிவெடுக்க தேவையே இல்லை..உச்ச நீதிமன்றம் பளீர்!
டெல்லி: பேரறிவாளன் விடுதலை பற்றி தமிழ்நாடு அமைச்சரவை முடிவு எடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை, ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்படவேண்டியது தானே என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இன்று பேரறிவாளன் விடுதலை வழக்கில் விசாரணை நடைபெற்றது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்து, தனக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில்தான் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கி உள்ளனர்.

உச்ச நீதிமன்றம்
தற்போது இவரை விடுதலை செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதற்கு முந்தைய அமர்வுகளில், ஆளுநர் எப்படி மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். பேரறிவாளன் ஆயுள் தண்டனை கைதி என்பதால் அவரின் விடுதலையில் ஆளுநர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தவறு என்று உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்தது.

கூட்டாட்சி
இந்திய கூட்டாச்சி தத்துவத்திற்கே இது எதிரானது என்றும் உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்தது. அதோடு பேரறிவாளனை யார் விடுதலை செய்வது என்ற அதிகார மோதலுக்கு இடையில் பேரறிவாளன் ஏன் சிக்கி தவிக்க வேண்டும். அவரை ஏன் நாங்களே விடுதலை செய்ய கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இன்று நடைபெற்ற அமர்வில், உச்ச நீதிமன்றம் இதே கேள்விகளை மீண்டும் எழுப்பியது. அமைச்சரவை முடிவு எடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து முடிவெடுக்க போகிறோம்.

வழக்கு விசாரணை
அமைச்சரவை முடிவு எடுத்த பின் ஆளுநர் அந்த விவகாரத்தை ஏற்க வேண்டும். ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்படவேண்டியது தானே. அதை விடுத்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரையை மேற்கொள்ளும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா. இதை பற்றி முதலில் மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும். பேரறிவாளன் ஏற்கனவே சிறையில் 30 வருடம் இருந்துவிட்டார். அவர் அங்கேயே படித்தும்விட்டார். அவரின் நடத்தையில் எந்த பிரச்சனையும் இல்லை.

கேள்வி மேல் கேள்வி
குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ யாராக இருந்தாலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட கூடாது. மத்திய அரசுக்கு இதில் வாதம் வைக்க எதுவும் இல்லை என்றால், நாங்கள் ஏன் இப்போதே அவரை விடுவிக்க கூடாது என்று கேள்வி எழுப்பியது.இதில் நீங்கள் முடிவு எடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவு எடுப்போம். குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம், என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பதில்
அதற்கு மத்திய அரசு தரப்பு, ஆளுநர் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்கு இந்த மனுவை அனுப்பிவிட்டார். இதனால் அவர்தான் இதில் முடிவு எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டது. ஆளுனர் குடியரசுத் தலைவருக்கு விடுதலை மனுவை அனுப்பியதற்கான ஆதாரம் எங்கே. அதை ஏன் சமர்ப்பிக்கவில்லை. அதை அடுத்த வாரத்திற்குள் தாக்கல் செய்யுங்கள். பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மத்திய அரசு ஏன் இன்னமும் முடிவு எடுக்கவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.












Click it and Unblock the Notifications