அமித் ஷா கட்டளையை நிறைவேற்றப்போகும் டாப் அதிகாரி.. மத்திய உள்துறை செயலராக கோவிந்த் மோகன் நியமனம்!
டெல்லி: மத்திய உள்துறை செயலராக கோவிந்த் மோகன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 22 அன்று முடிவடைந்ததும் அவருக்குப் பதிலாக மோகன் உள்துறை செயலராக செயல்படுவார். மோகன் தற்போது மத்திய கலாச்சார அமைச்சகத்தின் செயலாளராக உள்ளார்.
மத்திய உள்துறை செயலராக உள்ள அஜய் குமார் பல்லா வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதியுடன் பணி நிறைவு பெறுகிறார். அஜய் பல்லாவின் பதவிகாலம் கடந்த ஆண்டுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. அந்த பதவி காலம் வரும் 22 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து மத்திய கலாச்சாரத்துறை செயலராக இருக்கும் கோவிந்த் மோகன் உள்துறை சிறப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை செயலராக கோவிந்த் மோகன் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்யப்பட்டு, மத்திய அரசின் அமைச்சரவையின் நியமனக் குழுவால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்த் மோகன், வாரணாசியில் மின்னணு துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். இவர் 1989 ஆம் ஆண்டு பேட்ச் சிக்கிம் மாநில ஐ.ஏ.எஸ் கேடர் அதிகாரி ஆவார். தற்போது மத்திய கலாச்சாரத்துறை செயலாளராக இருந்து வருகிறார்.
மத்திய அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ள கோவிந்த் மோகன், கடந்த 2019 ஆம் ஆண்டு உள்துறை செயலராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் தற்போது மத்திய உள்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விரைவில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், உள்துறை செயலராக கோவிந்த் மோகன் நியமிக்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. பயங்கரவாதம், நக்சல்களை சமாளிப்பது மற்றும் ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை அமல்படுத்தும் பாஜக அரசின் வாக்குறுதிக்கு உதவுவது கோவிந்த் மோகனுக்கு முக்கிய சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications