வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
டெல்லி: இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டுமே முழுமையாக தீர்க்க முடியாது எனவும், கார்ப்பரேட் நிறுவனங்கள் கூடுதலாக வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் தேர்தல் களம் கொதித்துக் கொண்டு இருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக, இளைஞர்களின் வேலை வாய்ப்பு இன்மை பிரச்சினையை தீர்க்க தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதேபோல், தேர்தல் வாக்குறுதிகளிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பது தவறாமல் இடம் பெறுகின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அளித்த தேர்தல் வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பேன் என்று கூறினார். எனவே, மோடி தனது வாக்குறுதியை செயல்படுத்தவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் தான், இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் வேலை வாய்ப்பு தொடர்பாக பேசிய கருத்து விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. டெல்லியில் மனிதவள நிறுவனம் சார்பில், "இந்திய வேலை வாய்ப்பு அறிக்கை 2024' என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- நமது நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியாது. அதிக பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதில் அரசால் என்ன செய்ய முடியும். நாட்டில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். நமது நாட்டில் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து வருகிறது. குறிப்பிட்டு சொல்வது என்றால், பெண் தொழிலாளர்கள் மீதான பாரபட்சம் உள்ளது" என்றார்.
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இதுதொடர்பாக கூறுகையில், வேலையில்லாமைப் பிரச்னைக்கு அரசால் தீர்வு காண இயலாது என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. இது பாஜக அரசின் கையாலாகாத தன்மையைக் காட்டுகிறது பாஜக அரசால் இயலாது என்றால் "நாற்காலியைக் காலி செய்" என்று நாம் உரத்த குரலில் சொல்ல வேண்டும் வேலையில்லாமைப் பிரச்னைக்கு பல தீர்வுகள் உண்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்த வழிகளைப் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறோம்" என்று சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications