விவசாய சட்டம்.. கேள்விகளால் துளைத்தெடுத்த உச்சநீதிமன்றம்... மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவு..!
டெல்லி: புதிய வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தயாரா என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுதந்திர இந்தியாவில் இதுவரை இப்படியொரு போராட்டம் நடைபெற்றதில்லை எனக் கூறும் அளவுக்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தப் போராட்டம் தொடர்பான பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு மீது தனது கடும் அதிருப்தியை பதிவு செய்தது உச்சநீதிமன்றம்.
வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு தயார் என்றால் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தாமாக முன்வந்து ஒரு முடிவை எடுக்காவிட்டால் நீதிமன்றம் முடிவெடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்து மத்திய அரசுக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. அதேவேளையில் உச்சநீதிமன்றத்தின் கருத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான விவசாய பெருங்குடி மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
இதனிடையே விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு இதுவரை ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், புதிய வேளாண் சட்டங்களால் நல்லது என இதுவரை ஒருவர் கூட மனு தாக்கல் செய்யாததையும் இந்த வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.