இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி இறந்தது தியாகம் அல்ல.. விபத்து.. உத்தராகண்ட் அமைச்சர் பேச்சால் சர்ச்சை
"சுதந்திரத்தின் போது பகத் சிங், சாவர்க்கர், சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் தங்கள் இன்னுயிரையும், சுகபோக வாழ்க்கையையும் தியாகம் செய்தனர்"
புதுடெல்லி: "இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி இறந்தது தியாகத்தால் அல்ல. விபத்தால் தான்" என்று உத்தராகண்ட் அமைச்சர் கணேஷ் ஜோஷி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தியாகம் என்பது நேரு குடும்பத்தினரின் தனியுரிமை கிடையாது என்றும், காங்கிரஸில் இல்லாத பலரும் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு நாளில், தனது தந்தையும், பாட்டியும் மரணம் அடைந்த தருணங்கள் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கணேஷ் ஜோஷி இவ்வாறு பேசியுள்ளார்.
வன்முறையோட வலி தெரியுமா? நான் அனுபவிச்சிருக்கேன் தெரியுமா? ஸ்ரீநகரில் உருக்கமாக பேசிய ராகுல் காந்தி
"மோடிக்கு தெரியாது"
தனது பாரத் ஜோடோ நடைப்பயணத்தை நேற்று முன்தினம் காஷ்மீரில் ராகுல் காந்தி நிறைவு செய்தார். அப்போது அவர் பேசுகையில், "எனது தந்தை ராஜீவ் காந்தி, பாட்டி இந்திரா காந்தி ஆகியோர் கொலை செய்யப்பட்ட செய்தியை தொலைப்பேசியில் கேட்ட தருணம் இன்னும் என் மனதுக்குள் இருக்கிறது. அந்த வலி மிகவும் கொடியது. அதனால்தான் வன்முறையின் வலியை என்னால் உணர முடிகிறது. ராணுவ வீரரின் குடும்பத்திற்கும், சிஆர்பிஎப் வீரரின் குடும்பத்திற்கும் அந்த வலி தெரிந்திருக்கும். ஆனால், வன்முறையை திணிக்கும் மோடி, அமித்ஷா, பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியோரால் இந்த வலியை உணர முடியாது" என்றார்.
"ராகுல் காந்திக்கு புரியவில்லை"
இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த பேச்சு குறித்து உத்தராகண்ட் அமைச்சர் கணேஷ் ஜோஷியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், "ராகுல் காந்தியின் அறிவை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது. தியாகம் என்றால் என்ன என்று முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு அதன் அர்த்தம் புரியவில்லை என்று நினைக்கிறேன்.
"இந்திரா காந்தி செய்தது தியாகமா?"
சுதந்திரத்தின் போது பகத் சிங், சாவர்க்கர், சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் தங்கள் இன்னுயிரையும், சுகபோக வாழ்க்கையையும் தியாகம் செய்தனர். அதுதான் தியாகம். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி செய்தது தியாகமா? அவர்களுக்கு ஏற்பட்டது விபத்து. தியாகம் அல்ல. இதை ராகுல் காந்தி நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல, தியாகம் என்பது காங்கிரஸுக்கான தனி உரிமை கிடையாது. காங்கிரஸ் அல்லாதவர்களும் தியாகம் செய்துள்ளனர்.
மோடி தயவு இல்லாமல் நடந்திருக்குமா?
பாரத் ஜோடோ யாத்திரையை வெற்றிகரமாக ராகுல் காந்தி நிறைவு செய்துவிட்டார் என காங்கிரஸார் கூறுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் தயவு இல்லாமல் அது நடந்திருக்குமா? 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டிருக்காவிட்டால், காஷ்மீரில் ராகுல் காந்தியால் தேசியக் கொடியை ஏற்றி இருக்க முடியுமா? அமைதியான காஷ்மீரில்தான் ராகுல் காந்தி தேசியக் கொடி ஏற்றி இருக்கிறார். ஆனால், காஷ்மீரில் வன்முறை தலைவிரித்தாடும் போதே பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி தேசியக் கொடி ஏற்றியிருக்கிறார்" என கணேஷ் ஜோஷி கூறினார்.