வெறுப்பு பேச்சு.. அரசு இன்னும் ஏன் அமைதியாக இருக்கிறது?.. கண்டிப்புடன் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: தொலைக்காட்சி சேனல் மற்றும் சமூக வலைதள விவாதங்களில் வெறுப்புணர்வு தூண்டும் பேச்சுக்கள் ஒரு மனிதனை மெல்ல மெல்ல கொல்லும். இந்த விஷயத்தில் அரசு ஏன் இன்னும் அமைதியாக உள்ளது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி மத்திய அரசுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் சமீப காலமாக தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கான பேட்டியின்போது சிலர் எல்லை மீறி பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சிலர் வெறுப்புணர்வை தூண்டி விடுகின்றனர். இதனால் இந்தியாவின் பல்வேறு இடங்களில் போராட்டம், வன்முறையை தூண்டிவிடுகிறது.
இதனால் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசப்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனுத்தாக்கல் செய்தனர்.

உச்சநீதிமன்றம் விசாரணை
இதுதொடர்பாக கடந்த ஆண்டு முதல் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. உச்சநீதிமன்றத்தின் நீதிபதி கேஎம் ஜோசப் விசாரணை நடத்தினர். இந்த விசாரைணயின்போது அவர் வெறுப்பு பேச்சு தொடர்பாக பல்வேறு கருத்துகளை கூறினார். மேலும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து பதிலளிக்க உத்தரவிட்டார். இதுதொடர்பாக நீதிபதி கேஎம் ஜோசப் கூறியதாவது:

சுதந்திரத்துகான எல்லையை...
வெறுப்பு பேச்சு என்பது பிரதான ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களில் கட்டுப்பாடற்ற முறையில் உள்ளது. இதில் வெறுப்பு பேச்சுக்கள் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும். மேலும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதை தடுப்பதில் தொகுப்பாளர் (ஆங்கர்) பங்கு முக்கியமானதாகும். இது அவர்களின் கடமையும் கூட. நமது நாடு அமெரிக்கா போன்றது அல்ல. இங்கு பத்திரிகை சுதந்திரம் உள்ளது. இருப்பினும் சுதந்திரத்துக்கான எல்லையை அறிந்திருக்க வேண்டும்.

நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும்
வெறுப்புணர்வு தொடர்பான பேச்சு என்பது பல அடுக்குகளை கொண்டது. ஒருவரைக் கொல்வதை போல நீங்கள் பல வழிகளை பின்பற்றலாம். மெல்ல மெல்ல கொல்வது அல்லது வேறுவிதமாக கொல்வது ஆகியவற்றை போன்றதாகும். இருப்பினும் சில நம்பிகைகளின் அடிப்படையில் அத்தகைய பேச்சு ஒவ்வொருவரையும் கவர்ந்திழுக்கிறது. இந்த விஷயத்தில் அரசு நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும்.

மத்திய அரசுக்கு உத்தரவு
இது ஒரு சிறிய பிரச்சனையா?. இந்த விஷயத்தில் அரசு இன்னும் மவுனமாக இருப்பது ஏன்?. இதனால் வெறுப்பு பேச்சுகளை தடுக்கும் வகையில் சட்ட கமிஷன் பரிந்துரைகள்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி உச்சநீதிமன்றத்துக்கு மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்'' எனக்கூறினார். மேலும் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு நீதிபதி கேஎம் ஜோசப் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications