காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்! வழக்குகள் மீது செப்.21-ல் விசாரணை- உச்சநீதிமன்றம் அறிவிப்பு
சென்னை: காவிரி வழக்குகளை உடனே விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறிய நிலையில், காவிரி வழக்குகள் மீது செப்.21-ல் விசாரணை செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராட வேண்டியதாக இருக்கிறது. இந்த முறையும் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கவில்லை. எனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. தற்போது ஆகஸ்ட் மாதம் முடிய இருக்கிறது. இருப்பினும் இந்த மாதத்திற்கான 37.9 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா இன்னும் வழங்கவில்லை.

எனவே இந்த தண்ணீரை உடனே திறந்துவிடுமாறு உத்தரவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. அதில், "காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அதனை கர்நாடகா செயல்படுத்தவில்லை" என்பதை மேற்கோள் காட்டியிருந்தது. அதேபோல தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக கர்நாடக அரசும் பதில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
அதில், "நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாகவே பொழிந்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய பிரதான அணைகள் நிரம்பவில்லை. இருப்பினும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது" என்று விளக்கமளித்திருந்தது. இந்நிலையில் இந்த மனுவானது கடந்த 21ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,
"உச்சநீதிமன்றம் சொல்லியும் கர்நாடக அரசு தண்ணீர் கொடுக்கவில்லை. அதேபோல காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படியும் கர்நாடகா நடந்துக்கொள்ளவில்லை. எனவே இந்த மனுவை விசாரிக்க புதிய அமர்வை இன்றே அமைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா அடங்கிய புதிய அமர்வை நியமித்தது. இந்நிலையில் இந்த அமர்வு வழக்கு விசாரணையை கடந்த 28ம் தேதி தொடங்கியது.
அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இரு மாநிலங்களும் இதில் தொடர்புடைய அதிகாரிகளிடமே ஏன் இவ்விவகாரத்தை எடுத்துச் செல்லக் கூடாது? என்று கேள்வியெழுப்பினர். மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் பதில் தரவும் உத்தரவு பிறப்பித்தனர். அதாவது, "காவிரி மேலாண்மை ஆணையத்திடம்தான் நிபுணர்கள் இருக்கிறார்கள் நாங்கள் நிபுணர்கள் அல்ல. எதையும் விசாரிக்காமல் உடனடியாக உத்தரவு பிறப்பிப்பது என்பது எங்களுக்கு சிரமம்" என்று கூறி செப்டம்பர் மாதம் 1ம் தேதியன்று வழக்கை ஒத்தி வைத்தனர்.
இதற்கிடையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு, விநாடிக்கு 7,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்து. ஆனால், 5,000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கடந்த 31ம் தேதி பதில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி இந்த வழக்கு குறித்த விசாரணை மீண்டும் தொடங்க இருந்தது. ஆனால் ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வு அன்று விசாரித்ததால் இந்த வழக்கின் விசாரணை நடைபெறவில்லை..












Click it and Unblock the Notifications