தலைநகரை தலைசுற்ற வைத்த புழுதி புயல்.. விமான போக்குவரத்து நிறுத்தம்.. மக்கள் அவதி
டெல்லி: தலைநகர் டெல்லியில், இன்று வீசிய புழுதிப் புயல் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
டெல்லியில் கடும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்றையதினம் அதிகபட்சமாக 48 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. இதுவரை ஜூன் மாதத்தில் பதிவான உச்ச பட்ச வெப்பநிலை இது என்ற சாதனையை படைத்தது.

இன்றும் கடுமையான வெப்பம் சுட்டெரித்த நிலையில், மாலை சுமார் 6.30 மணி அளவில் திடீரென கடுமையான, புழுதி புயல் வீசியதோடு, லேசான மழை பெய்ய தொடங்கியது. இதன்காரணமாக வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குக் குறைந்தது.

புழுதிப் புயல் காரணமாக சாலைகளில் வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகினர். சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதன் காரணமாக இந்திரா காந்தி விமான நிலையத்தில் சுமார் ஒரு மணிநேரம் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தலைநகருக்கு வரக்கூடிய விமானங்கள், வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. புழுதி புயல் ஓய்ந்த பிறகே, மீண்டும் விமான போக்குவரத்து ஆரம்பித்துள்ளது.













Click it and Unblock the Notifications