தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை
டெல்லி: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் கனமழை வெளுத்தெடுத்து வருகிறது. தமிழகம், கேரளா, கர்நாடகாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், மதுரை, கள்ளக்குறிச்சி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று இரவும் திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்தெடுத்தது.
இதேபோல் கர்நாடகாவில் பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. கேரளாவிலும் பல மாவட்டங்கள் தொடர்ந்து கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. கேரளாவின் இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகி இருந்தனர்.
கர்நாடகாவில் கனமழையால் ரூ7,647.13 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு மதிப்பீடு செய்து மத்திய அரசிடம் நிவாரண உதவி கோரியுள்ளது. கர்நாடகாவில் மழை,வெள்ளத்தால் மொத்தம் 96 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் உத்தரப்பிரதேசத்திலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இம்மாநிலத்தில் கனமழையால் சுமார் 2.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பேரிடர் மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications