புல் ஃபயரில் ராகுல்காந்தி.. ஹிண்டன்பர்க் வெளியிட்ட அதானி நிறுவன மோசடிகள் என்னென்ன? பிளாஷ்பேக்
டெல்லி: அதானி ஊழல்வாதி என ராகுல் காந்தி கூற காரணமாக இருக்கும் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையில் என்னென்ன குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை பார்ப்போம்.
உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் கவுதம் அதானி குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறார். இன்றைய தினம் கூட பிரஸ்மீட்டில், அடுத்ததாக நான் அதானி குறித்து பேசக் கூடாது என்பதற்காகவே என்னை தகுதி நீக்கம் செய்துள்ளதாக கூறியிருந்தார்.
மேலும் அதானி ஊழல்வாதி என அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த ஊழல்வாதியை காப்பாற்ற ஏன் பிரதமர் மோடி போராடுகிறார் என்பதுதான் என்னுடைய கேள்வி என்றும் ராகுல் தெரிவித்தார்.

ராகுல்
ராகுல், அதானி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்க முக்கிய காரணம் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கைதான். அப்படி அந்த அறிக்கையில் என்னதான் இருக்கிறது என பார்ப்போம். அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அதானி குழுமம்
அதில் இந்தியாவில் செயல்படும் அதானி குழுமத்தை சேர்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதி நிலையை உண்மைக்கு புறம்பான வகையில் காட்டுகிறார்கள் என்றும் பங்கு சந்தையை ஏமாற்றி லாபம் பார்க்கிறது என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் வெளிநாடுகளில் போலியான நிறுவனங்களை உருவாக்கி அங்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனையையும் செய்வதாக அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

ஹிண்டன்பர்க் அறிக்கை
இந்த ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை நோக்கி சென்றன. ஒரே நாளில் அதானி குழுமத்திற்கு ரூ 49 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. பொதுத் துறை நிறுவனங்கள் அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் கடும் இழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து உலக பணக்காரர்களின் பட்டியலில் 3ஆவதாக இருந்த அதானி 7 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த அறிக்கையை தயாரிக்க இந்த அமெரிக்க நிறுவனத்திற்கு இரு ஆண்டுகள் ஆனது. மொத்தம் 100 பக்கங்கள் கொண்ட அறிக்கை வெளியானது.

38 ஷெல் நிறுவனங்கள்
அதானியின் சகோதரர் வினோத் அதானிக்கு சொந்தமாக மொரீஷியஸில் 38 ஷெல் நிறுவனங்கள் உள்ளன. வரி ஏய்ப்பு செய்வதற்காகவே கரீபியன் தீவுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை நடத்தியுள்ளது. அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், அவர்கள் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியானது.

கடன் அதிகம்
மேலும் இந்த அறிக்கையில் அதானி குழுமத்தின் கடன் அதிகமாக இருக்கிறது. அது போல் கணக்குகளிலும் மோசடி நடந்துள்ளது. பங்குவிலையை அதானி குழுமம் தங்கள் இஷ்டத்திற்கு கட்டுப்படுத்தியுள்ளனர் என பல்வேறு முறைகேடுகள் குறித்து வெளியாகியுள்ளது. மேலும் அதிக மதிப்பீட்டின் மூலம் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 85 சதவீதம் வரை அதிகரிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

3 ஆண்டுகளில் பங்கு உயர்வு
மேலும் அதானியின் சொத்து மதிப்பு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 100 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த 3 ஆண்டுகளில் அதானி குழுமத்தின் பங்குகள் சராசரியாக 819 சதவீதம் அளவுக்கு அபரிமிதமாக உயர்ந்தது என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஹிண்டன்பர்க் அறிக்கையில் 88 கேள்விகளுக்கு பதில் அளிக்க அதானி குழுமத்திடம் கேட்டிருந்தது. ஆனால் ஒன்றுக்கும் அதானி குழுமம் பதில் அளிக்கவில்லை.

அறிக்கைக்கு மறுப்பு
ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து அதானி குழுமம் மறுத்து 400 பக்க அறிக்கையை வெளியிட்டது. அதில் ஹிண்டன்பர்க் அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் ஒரு தலைபட்சமான குற்றச்சாட்டு என்றும் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கைக்கும் ஹிண்டன்பர்க் பதில் அளித்திருந்தது.












Click it and Unblock the Notifications