செங்கோட்டை சுற்றி விமானங்களுக்கு தடை! ஹை அலர்ட்டில் போலீஸ்! சுதந்திர தினத்திற்கு ரெடியாகும் டெல்லி
டெல்லி: நாட்டின் 75ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் நாளைய தினம் மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார்.
அதேபோல நாடு முழுவதும் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்காகத் தற்காலிக சட்டத் திருத்தமும் கொண்டு வரப்பட்டு உள்ளது.

75வது சுதந்திர தினம்
நாட்டின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில காலமாகவே பயங்கரவாதிகள் தாக்குதல் முயற்சி அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உட்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
நாளைய தினம் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து வரும் பல முக்கிய விஐபிக்கள், மத்திய அரசின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விரும்தகாத சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில், பாதுகாப்புப் படையினர் மீது தீவிர போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். விழாவை அமைதியான முறையில் நடத்தவும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

விமானங்களுக்குத் தடை
மேலும், கொரோனா வைரஸ் காரணமாக கொரோனா வழிகாட்டுதல்களும் இதில் முறையாகக் கடைப்பிடிக்கப்பட உள்ளது. கார் பார்கிங் தொடங்கி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டையை சுற்றியுள்ள 5 கிமீ பகுதியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், வாகனங்கள் அவ்வப்போது சோதனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அனுமதி இல்லை
டெல்லி செங்கோட்டையை சுற்றியுள்ள சாலைகளில் காலை 4 மணி முதல் 10 மணி வரை ஏற்கனவே அனுமதி பெறப்பட்டுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இதர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மேலும், பல முக்கிய சாலைகளில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 11 மணி வரை வணிக பயன்பாட்டு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. செங்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பொதுமக்கள்
டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நேரில் காணப் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் முடிந்த உடன், விவிஐபிக்கள் வெளியேறிய பின்னரே பொதுமக்கள் கலைந்து செல்ல வேண்டும். பொதுமக்கள் சிறிது சிறிதாகக் கலைந்து செல்வதை உறுதிப்படுத்தும் பணிகளைப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிக்க உள்ளனர். எந்தவொரு அதிகாரியும் நிகழ்ச்சி முடியும் வரை கண்டிப்பாக பணியமர்த்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து நகரக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications