அவங்க குறைச்சா.. நாங்களும் குறைக்கறோம்.. பெட்ரோல் விலையேற்றத்திற்கு.. நிர்மலா சீதாராமன் கூல் பதில்
டெல்லி: பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்பது சரிதான் என்றாலும் மத்திய அரசு எரிபொருள் மீது வசூலிக்கும் வரி வருவாயில் 41% மாநில அரசுக்கே செல்வதால், இது தொடர்பாக மத்திய- மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்து. அதேபோல மற்ற மாநிலங்களிலும் வரலாறு காணாத விலையில் பெட்ரோல் & டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் காரணமாக நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து, நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. கடந்தாண்டு கொரோனா பரவல், தேவை குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் கச்சா எண்ணெய் விலை படுபாதாளத்திற்குச் சென்றது. அப்போது கொரோனாவால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்யும் வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரலாறு காணாத வகையில் கலால் வரியை உயர்த்தினார்.
குறைக்க வேண்டும்
இப்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் மத்திய அரசு கலால் வரியைக் குறைக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "நுகர்வோரைப் பொறுத்தவரை எரிபொருள் விலை ஒரு சுமையாகவே அவர்களுக்கு உள்ளது. விலைகள் குறைய வேண்டும் என்று மக்கள் சொல்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளன.
மாநிலங்களுக்கு தென் செல்கிறது
ஆனால் இங்கு தான் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் விலை குறித்து மத்திய அரசுடன் மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏனெனில் பெட்ரோலிய பொருட்கள் மீது மத்திய அரசு மட்டுமில்லை, மாநில அரசுகளும் கூடுதல் வரி விதித்துள்ளன. மத்திய அரசு எரிபொருட்கள் மீது வசூலிக்கும் வரிகளில் 41% மாநிலங்களுக்கே செல்கின்றன. எனவே, இதில் பிரச்சனை உள்ளது. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
கலால் வரி
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை அதளபாதளத்திற்கு சென்றது. அப்போது பெட்ரோல் மீதான கலால் வரி 13 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி 16 ரூபாயும் உயர்த்தப்பட்டது. தற்போது ஏற்படுடள்ள விலையேற்றத்திற்கு இது ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது.
75 ரூபாய்க்கு பெட்ரோல்
இந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அதில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன் எஸ்பிஐ வல்லுநர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் பெட்ரோல் விலை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டுவரப்பட்டால் லிட்டருக்கு 75 ரூபாயாகவும், டீசல் விலை 68 ரூபாய்க்கும் வரும் என தெரிவித்தனர். இதனால் மத்திய அரசுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.4% வரை மட்டுமே வருமான இழப்பு ஏற்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.