பராமரிப்பு பணியின்போது ஏவுகணை கிளம்பி பாகிஸ்தான் போய் விட்டது.. ராஜ்யசபாவில் ராஜ்நாத்சிங் விளக்கம்
டெல்லி: இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் தவறுதலாக விழுந்தது தொடர்பாக உயர்நிலை விசாரணை நடைபெற்று வருவதாக ராஜ்யசபாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் நகரில் ஏவுகணைகள் பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது. கடந்த 9-ந் தேதியன்று ஏவுகணைகளில் ஒன்று தவறுதலாக விண்ணில் சீறிப் பாய்ந்தது. 40,000 அடி உயரத்தில் பறந்த இந்த ஏவுகணை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான் கன் நகரில் குடியிருப்புகள் மீது விழுந்தது. இதில் குடியிருப்புகள் மட்டும் சேதமடைந்தன. இந்த ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானுக்குள் விழுந்ததில் யாரும் உயிரிழக்கவில்லை.

பாக். கண்டனம்
இந்திய ஏவுகணை தங்கள் நாட்டுக்குள் தவறுதலாக விழுந்த விவகாரத்தை பாகிஸ்தான் பெரிதுபடுத்தி வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை அழைத்து நேரில் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்த விவகாரத்தை எழுப்புவோம் என்றது பாகிஸ்தான்.

மத்திய அரசு விளக்கம்
இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது. அந்த விளக்க அறிக்கையில், ஏவுகணை பராமரிப்பு பணிகளின் போது தவறுதலாக விண்ணில் சீறிப் பாய்ந்தது. இது வருத்தத்துக்குரியதுதான். இது தொடர்பாக ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பாகிஸ்தான் இந்த விளக்கத்தை ஏற்கவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவின் ஏவுகணை விழுந்தபோது பதிலடி தந்திருக்க முடியும். ஆனாலும் பொறுமை காத்தோம். ராணுவத்தையும் நாட்டையும் பலப்படுத்த வேண்டும் என இம்ரான் கான் கூறியிருந்தார்.

ராஜ்நாத்சிங் விளக்கம்
இந்நிலையில் ராஜ்யசபாவில் இன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று ஏவுகணை விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய ராஜ்நாத்சிங், ஏவுகணை பராமரிப்பு பணியின் போது தவறுதலாக விண்ணில் பாய்ந்தது. பாகிஸ்தான் குடியிருப்புகள் மீது ஏவுகணை விழுந்தது. இதில் உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக உயர்நிலை விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

அமெரிக்கா,சீனா
இதனிடையே இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்தது தவறுதலாக நிகழ்ந்த ஒரு விபத்துதான் என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இதேபோல் சீனாவும் இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; ஏவுகணை தவறுதலாக விழுந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என சீனா கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications