ஹிஜாப்.. தேசிய பிரச்சனையாக்காதீர் -மாணவிகள் மேல்முறையீட்டை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லி: ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவிற்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
கர்நாடக பியு கல்லூரிகளில் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்துத்துவா மாணவர்களின் எதிர்ப்பு காரணமாக இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
இது கர்நாடகாவில் மிகப்பெரிய மத ரீதியான மோதலாகவும் வெடித்து உள்ளது. இந்துத்துவா மாணவர்கள் பலர் அங்கு காவி துண்டு அணிந்து இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.
திருக்குர்ஆனில் ஹிஜாப் அணிய கூறப்பட்டுள்ளது! சீருடையை தவிர்க்கவில்லையே: ஹைகோர்ட்டில் அனல்பறந்த வாதம்
ஹிஜாப் வழக்கு
இந்த நிலையில் ஹிஜாப் அணிய அனுமதி கேட்டு இஸ்லாமிய மாணவிகள் பலர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். முதலில் ஒரு நீதிபதி அமர்வும், அதன்பின் 3 நீதிபதி அமர்வும் இந்த வழக்கை விசாரித்து வந்தது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதில் நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மாணவிகள் தரப்பு வாதம்
இதில் மாணவிகள் தரப்பு வைத்த வாதத்தில், இந்த கட்டுப்பாடு எங்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டம் வழங்கி இருக்கும் அடிப்படை உரிமை 25க்கு எதிரானது இந்த உத்தரவு. எங்கள் மத உரிமையையும் இது கேள்வி கேட்கிறது, என்று வாதம் வைத்தனர். அதோடு அரசு தரப்பு வழக்கறிஞர், ஹிஜாப் என்பது அடிப்படை உடை உரிமையில் வருமா, அது இஸ்லாமில் கட்டாயம் அணியப்பட வேண்டிய உடையா என்று ஆராய வேண்டும் என்று வாதம் வைத்தது.
இடைக்கால தடை
இதையடுத்து ஹிஜாப், காவி உடை என எதையும் கல்வி நிலையங்களுக்கு அணிந்து வரக்கூடாது என்று கர்நாடக ஹைகோர்ட் இடைக்கால உத்தரவு போட்டது. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சீருடையை மட்டுமே மாணவர்கள் அணிய ஹைகோர்ட் இடைக்கால உத்தரவு போட்டது. ஹிஜாப்புக்கு அனுமதி கேட்ட வழக்கு விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதோடு பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் கர்நாடக ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
மாணவிகள் முறையீடு
இந்த நிலையில் ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவிற்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு தங்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது. இதனால் கர்நாடக ஹைகோர்ட்டில் இடைக்கால உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே முறையீடு
முன்னதாக கர்நாடக ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுப்பு தெரிவித்தது. கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த வழக்கை முதலில் விசாரிக்கட்டும் என்று காங்கிரசை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்துள்ளார். இப்போதே துரிதமாக இதை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை விதிக்கிறதா என்று முதலில் பார்க்கலாம், என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேல்முறையீடு
இந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் இன்று மாணவிகளின் மேல்முறையீட்டு மனு பட்டியலிடப்பட்டது. ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதில் கர்நாடக ஹைகோர்ட் உத்தரவு தங்களின் உரிமைகளை பறிப்பதாகவும், எனவே உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை வரும் திங்கள் கிழமை விசாரிக்க வேண்டும் என்றும் மாணவிகள் தரப்பு கோரிக்கை விடுத்தது.
விசாரணை
ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, கர்நாடக ஹைகோர்ட்டில் நடப்பதை கவனித்து வருகிறோம். தேவையான நேரத்தில் இந்த வழக்கில் தலையிடுவோம். உங்கள் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று தெரியும். டெல்லியில் இதை விசாரிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அது சரியாக இருக்குமா.. இந்த பிரச்னையை இன்னொரு லெவலுக்கு கொண்டு செல்ல வேண்டாம்.
விசாரிக்க மறுப்பு
இதை தேசிய பிரச்சனையாக்க வேண்டாம். இதில் அரசியலமைப்பு சட்டப்படி நீதிமன்றம் நடக்கும், அரசியலமைப்பு சட்டம் கொடுத்து இருக்கும் சுதந்திரம் காக்கப்படும். இதில் அவசரப்பட வேண்டாம். கர்நாடக ஹைகோர்ட் வழக்கில் தீர்ப்பு வழங்கட்டும். தேவையான நேரத்தில் நாங்கள் இதில் தலையிடுவோம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா உத்தரவிட்டார்.