ஹிஜாப் அணியும் பெண்களை கண்ணியமாக பார்க்க வேண்டும்.. அதுதான் அவர்கள் பலமே- உச்சநீதிமன்றத்தில் வாதம்
டெல்லி: ஹிஜாப் அணிந்த பெண்கள் ஒன்றும் கேலி சித்திரங்கள் இல்லை என்றும், அவர்கள் ஹிஜாபை தங்கள் பலமாக பார்க்கிறார்கள் எனவும் உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் ஹிஜாப் வழக்கில், ஆஜரான வழக்கறிஞர் யூசுப் முச்சாலா தெரிவித்து உள்ளார்.
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல அரசு விதித்த தடைக்கு எதிராக உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.
அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

உச்சநீதிமன்றம்
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு முன்பு கடந்த திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. கடந்த 3 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.

பரபரப்பு வாதம்
இந்த நிலையில் 2 நாள் ஒத்திவைப்புக்கு பிறகு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹிஜாப் தடைக்கு எதிராக வழக்கறிஞர் யூசுப் முச்சாலா மற்றும் மூத்த வழக்கறிஞரும் இந்திய முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான சல்மான் குர்ஷீத் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

வழக்கறிஞர் யூசுப்
இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் யூசுப் முச்சாலா, "நாம் அனைவரும் இந்தியர்கள். நாம் அனைவரும் தேசியவாதிகள். மதங்களை பின்பற்றுபவர்களும் தேசியவாதிகளாக இருந்துள்ளார்கள். இந்திய சுதந்திர போராட்டம் இதைதான் கூறியது." என்று கூறிய அவர், சிறிய தாடி வைப்பது, நீளமான தாடி வைப்பது, தொப்பி அணிவது போன்றவை அவரவர் சுய விருப்பம் சார்ந்தது என்ற நீதிபதி புட்டுசுவாமி தீர்ப்பை சுட்டிக்காட்டினார்.

கேலிசித்திரங்கள் அல்ல
"இந்த இளம் மாணவிகள் என்ன குற்றம் செய்தார்கள். சிறிய துணியை கொண்டு தங்கள் தலையை மறைத்தது தவறா? ஹிஜாப் அணியும் பெண்களை கேலி சித்திரங்களாக பார்க்கக் கூடாது. அவர்களை கண்ணியமாக பார்க்கவேண்டும். அவர்கள் பலமானவர்கள். ஹிஜாபை தங்கள் சக்தியாக பார்க்கிறார்கள். அவர்கள் மீது யாரும் முன் முடிவுகளை வைக்க முடியாது." என்றார்.












Click it and Unblock the Notifications