தமிழ்நாட்டின் மீது இந்தியை திணிக்கவில்லை.. சிலர் அரசியல் பண்ணுறாங்க! தர்மேந்திர பிரதான்
டெல்லி: மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த சிலர் அரசியல் செய்வதாகவும் தேசிய கல்விக்கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் தருகிறது. தமிழ் மொழி பழமையானது. தேசிய கல்விக் கொள்கை பிரதமரின் கனவுதிட்டம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். மும்மொழி கொள்கை அமல்படுத்தினால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க முடியும் என்று தர்மேந்திர பிரதான் பேசியது சர்ச்சையான நிலையில், அவர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்ஷா அபியான்) கீழ் தமிழக அரசுக்கு நடப்பாண்டில் ஒதுக்க வேண்டிய ரூ.2.152 கோடி நிதியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் தமிழக அரசு இணைய கையெழுத்திட்டால் மட்டுமே நிதி ஒதுக்க முடியும் என தெரிவித்துவிட்டது.

பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைந்தால், அது தேசியக் கல்விக் கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றுக் கொண்டதாகிவிடும் என்பதால், அதில் தமிழக அரசு இணையவில்லை. இருப்பினும் நிதியை வழங்க கோரி தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
ஆனால் இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான், மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியை தர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் ஆளும் திமுக உள்பட அனைத்து கட்சிகளும் கடுமையாக சாடி வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் தர்மேந்திர பிரதான் பேச்சை கடுமையாக கண்டித்தார். திமிராக பேசினால் தமிழர்கள் தனிக்குணத்தை காட்டுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக முதல்வர் கூறுகையில், 'மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது' என மிரட்டல் தொனியில் பேசுவதை தமிழர்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.
எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம். உங்கள் தனிச்சொத்தைக் கேட்பது போல் திமிராக பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது கருத்துக்கு விளக்கமளிக்கும் வகையில் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் மீது இந்தியை திணிக்கவில்லை. மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயம் இல்லை. மூன்றாவது மொழி பிற இந்திய மொழிகளில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தமிழகத்தில் உள்ள சிலர் இதில் அரசியல் செய்கின்றனர். தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தருகிறது. தமிழ் மொழி பழமையானது. தேசிய கல்விக் கொள்கை பிரதமரின் கனவுத்திட்டம். இதை செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம். என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications