பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சால் இந்துக்கள் பாதிப்பு... சவூதி அரேபியாவில் பலர் பணி நீக்கம்
டெல்லி: முஹம்மது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா அவதூறாக பேசிய நிலையில் சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இந்துக்கள் கட்டாய விடுப்பும், பணிநீக்கமும் செய்யப்பட்டு வருகின்றனர்.
Recommended Video
சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான முஹம்மது நபி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் வழக்குப்பதிவு
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து வட மாநிலங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மகாராஷ்டிராவில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கலவரம்
அங்கு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் புகழ்பெற்ற பராத்தே என்ற சந்தையில் கடைகளை அடைக்க மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக உருவெடுத்தது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் பலர் காயமடைந்தனர். இரு தரப்பு மோதலை தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

போலீஸ் தடியடி
போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென வெடிகுண்டு வீசப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. தகவலறிந்து கலவர பகுதிக்கு சென்ற போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டியடித்தனர். தொடர்ந்து மோதல் குறையாததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அந்த இடமே கலவரமயமாக காட்சியளித்தது.

புல்டோசர் வரும்
இந்த கலவரம் தொடர்பாக 36 பேரை முதல்கட்டமாக போலீசார் கைது செய்து இருக்கின்றனர். ஆயிரம் பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர்களில் 40 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உள்ளார்கள். கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அரபு நாடுகள்
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குவைத், கத்தார், ஓமன் ஆகிய நாட்டு அரசுகள் இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர்.

பாஜக நடவடிக்கை
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், மத அடிப்படையில் இழிவுபடுத்துவது பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், தங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது எனவும் கூறினார். இதனை தொடர்ந்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்த நுபுர் ஷர்மா மற்றும் அக்கட்சியை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டு உள்ளனர்.

சவூதியில் வேலையிழக்கும் இந்துக்கள்
இதனிடையே சவூதி அரேபியாவில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் இந்துக்கள் பணி நீக்கமும் கட்டாய விடுப்பும் செய்யப்படுவதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பணிபுரிந்த 7 பேருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதாக சக இந்திய ஊழியர் தெரிவித்துள்ளார். அதேபோல், அங்கு தச்சர் வேலை செய்து வரும் இந்தியருக்கு தான் வழங்கிய ஸ்பான்சர்சிப்பை ரத்து செய்துவிட்டதாக அரபி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சால் இதுபோல் அப்பாவி இந்துக்கள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications