அடுத்தடுத்து 7 இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. கனடாவில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா
டெல்லி: ஒரே நாளில் அடுத்தடுத்து 7 இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த விமானங்கள் அவசர அவசரமாக பல்வேறு விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன. டெல்லியில் இருந்து சிகாகோவிற்கு சென்ற விமானம் வெடிகுண்டு மிரட்டலால் அவசரமாக கனடாவில் தரையிறக்கபட்டது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
அண்மைக்காலமாகவே பள்ளிகள், விமான நிலையங்கள், விமானங்கள் என மக்கள் கூடும் இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. போலியாக இது போன்று விடுக்கப்படும் மிரட்டல்களால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பரபரப்பும் ஏற்படுகிறது. இதனிடையே, ஒரே நாளில் அடுத்தடுத்து 7 இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

மும்பையில் இருந்து புறப்பட்ட 3 சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. எக்ஸ் தளம் வாயிலாக இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விமானங்கள் அவசர அவசரமாக திருப்பி விடப்பட்டு அருகில் உள்ள விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன. 48 மணி நேரத்திற்குள் 10 க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு இப்படி வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
டெல்லி - சிகாகோ விமானம், டாமன் - லக்னோ இண்டிகோ விமானம், அயோத்யா - பெங்களூர் எர் இந்தியா எக்ஸ்பிரஸ், தர்பங்கா - மும்பை இடையே இயக்கப்படும் ஆகாஷா ஏர் விமானம், பகதோஹ்ரா டூ பெங்களூர் விமானம், அமிர்தசரசில் இருந்து டேராடூன் மற்றும் டெல்லிக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள், மதுரை டூ சிங்கப்பூர் சென்ற விமானங்கள் ஆகியவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
முன்னதாக நேற்று முன் தினம், இரண்டு இண்டிகோ விமானம் மற்றும் ஒரு ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அடுத்தடுத்த இந்த வெடிகுண்டு மிரட்டல்களால் விமான பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமானங்கள் அவசரமாக பல்வேறு ஏர்போர்ட்களிலும் தரையிறக்கப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் வெறும் புரளி என தெரியவந்தது.
டெல்லியில் இருந்து சிகாகோவிற்கு சென்ற விமானம் கனடாவில் உள்ள இகாலியூட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேற்கு வங்க மாநிலம் பக்டோக்ராவில் இருந்து பெங்களூர்க்கு புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதையடுத்து பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் வெடிகுண்டு மிரட்டல் வந்த விமானங்களில் அடங்கும். அந்த விமானம் சிங்கப்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக விமான பாதுகாப்பு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications