உள் துறை அமைச்சர் அமித் ஷா... கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்
டெல்லி: தேசிய தலைநகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார்.
இந்தியாவில் இரண்டாம்கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. அதன்படி 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நாட்டிலுள்ள முக்கிய அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் அவர்களும் விரைவில் தடுப்பூசியை எடுத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தலைநகர் பகுதியிலுள்ள மெதந்தா மருத்துவமனையில் அவர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார். முன்னதாக, இன்று காலை டெல்லியுள்ள எய்மஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார்.
56 வயதாகும் உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுமார் இரண்டு வார சிகிச்சைக்குப் பின் அவர் மருத்துவமனையிலிருந்து திரும்பினார். இருப்பினும், அவருக்கு கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் எய்மஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications