கல்வி கட்டணம், அரசு பள்ளி சீரமைப்பு, குடிநீர், மின்கட்டணம்- கெஜ்ரிவாலின் அபார வெற்றியின் பின்னணி
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு காரணம் மக்களின் முதன்மை பிரச்சனைகளில் படுதீவிரமாக அக்கறை செலுத்தியதுதான் என்கின்றனர் டெல்லி வாக்காளர்கள்.
டெல்லியில் 3-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகிறார். கடந்த 5 ஆண்டுகளில் சப்தமில்லாமல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காட்டிய தீவிரம்தான் இன்று அவர் வெற்றியை அறுவடை செய்ய காரணம்.

டெல்லியில் 200க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளை கடந்த 5 ஆண்டுகளாக கல்வி கட்டணத்தை உயர்த்த கெஜ்ரிவால் அரசு அனுமதிக்கவே இல்லை. இத்தனைக்கும் இந்த தனியார் பள்ளிகள் நீதிமன்றங்களில் முட்டி மோதிப் பார்த்தும் கெஜ்ரிவால் அரசு அசைந்து கொடுக்கவில்லை. தற்போதைய தேர்தல் பிரசாரத்தின் போதும் கூட கல்வி கட்டண பிரச்சனையைப் பற்றியும் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்திருந்தார். இது டெல்லி மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளில் ஒன்று என்பதால் கை கொடுத்திருக்கிறது.
டெல்லி அரசுப் பள்ளிகளிலும் அதிரடி மாற்றங்களை கெஜ்ரிவால் அரசு மேற்கொண்டது. அரசு பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியது, ஆசிரியர்களுக்கும் தனி பயிற்சி அளித்தது என பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது கெஜ்ரிவால் அரசு. துணை முதல்வர் மணீஷ் சிசோடியாதான் கல்வித் துறையை அமைச்சர். அவரது பங்கும் மிகவும் முக்கியமானது. இது பற்றி கெஜ்ரிவால் கூறுகையில், கடந்த மூன்றரை ஆண்டுகளில் டெல்லி நிதி நிலை அறிக்கையில் 25% நிதி கல்வித்துறையில் முதலீடு செய்யப்பட்டது என்றார். தற்போது டெல்லி அரசு பள்ளிகள் உலகத் தரம் வாய்ந்த பள்ளிகளாக ஸ்மார்ட் பள்ளிகள், நீச்சல் குளங்கள், நூலகங்கள் என நவீன வசதிகளுடன் திகழ்கின்றன என்றார். அதேபோல் டெல்லி அரசுப் பள்ளிகள் பெற்றோர்- ஆசிரிய கலந்துரையாடலை மிக முனைப்புடன் செயல்படுத்தியது ஆம் ஆத்மி அரசு. இது பெற்றோர்களுக்கு பெரும் நம்பிக்கையை தந்திருக்கிறது.
மின் கட்டணத்தில் சலுகைகளை அறிவித்ததுடன் அதை முறையாக செயல்படுத்தியது கெஜ்ரிவால் அரசு. அதேபோல் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மாதத்துக்கு 20,000 லிட்டர் இலவச குடிநீர் என்பதையும் நிறைவேற்றிக் கொடுத்தது கெஜ்ரிவால் ஆட்சி. மேலும் நவீன மருத்துவ வசதிகளைக் கொண்ட கிளினிக்குகளை அமைத்து கொடுத்தது ஆம் ஆத்மி அரசு. பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் என சில மாதங்களுக்கு முன்னர் கெஜ்ரிவால் அறிவித்ததும் தேர்தல் வெற்றிக்கு பெருமளவு கை கொடுத்திருக்கிறது.
கடந்த 2015 தேர்தல்லின் போது ஜம்மா மசூதி இமாம் சையது அகமது புகார், ஆம் ஆத்மிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் இதை அப்போது நிராகரித்தார். வலதுசாரியாகவும் இடதுசாரியாகவும் இல்லாமல் யாரையும் பகைத்துக் கொள்ளாத பொது அரசியலை முன்னெடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இதனால் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து கெஜ்ரிவால் அரசுக்கு ஆதரவு தந்துள்ளனர். கடந்த காலங்களில் மத்திய அரசுடன் படுதீவிரமாக மல்லுக்கட்டினார். கடந்த சில மாதங்களாக இந்த போக்கை அடியோடு மாற்றிக் கொண்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.
நாடு முழுவதும் சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக கடுமையாக போராட்டங்கள் நடைபெற்ற போதும் தம்மை அதிக அளவில் அதில் ஈடுபடுத்திக் கொள்ளாமல் ஒதுங்கி இருந்தவர் கெஜ்ரிவால். இதன் மூலம் தடாலடி அரசியல்வாதி; மல்லுக்கட்டுகிற அரசியல்வாதி என்கிற இமேஜ் மாறி தேர்தலில் கை கொடுத்திருக்கிறது என பட்டியலிடுகின்றனர் டெல்லி வாக்காளர்கள்.












Click it and Unblock the Notifications