குற்றம்சாட்டிவிட்டாலே புல்டோசர்களை ஏவிவிட்டு வீடுகளை இடிப்பீங்களா? செம்ம டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
டெல்லி: ஒருவர் மீது குற்றம்சாட்டியிருந்தாலே எப்படி புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்து தள்ளிவிட முடியும்? இது தொடர்பாக ஏற்கனவே எச்சரித்தும் எந்த ஒரு முறையான நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என உச்சநீதிமன்றம் இன்று சரமாரியாக கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தது. வழக்கில் ஒருவர் தண்டனை பெற்றிருந்தாலும் கூட அவரது வீடு, சொத்துகளை எப்படி புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ள முடியும்? என்பதும் உச்சநீதிமன்றத்தின் கேள்வி.
உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குகளில் ஒருவர் குற்றம்சாட்டப்பட்டாலே அவர்களது வீடுகள், வணிக வளாகங்களை உடனே புல்டோசர்கள் கொண்டு இடிக்கும் நடவடிக்கையை மாநில அரசுகளே மேற்கொள்வது புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநில அரசிடம் இருந்து புல்டோசர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என பாடம் கற்க வேண்டும் என லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியும் பேசியிருந்தார்.

ஆனால் இத்தகைய புல்டோசர்கள் மூலம் நீதிவழங்குகிறோம் என்ற அடக்குமுறையால் தலித்துகள், சிறுபான்மையினர், பழங்குடியினர்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் இந்த புல்டோசர் மூலம் நீதி வழங்கும் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர கோரியும் நாடு முழுவதும் இத்தகைய நடவடிக்கைகளை மாநில அரசுகள் ஒழுங்குபடுத்தக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவாய், விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த பொதுநலன் மனுக்களை விசாரித்து கடுமையான கண்டனம் தெரிவித்தது. இன்றைய விசாரணையின் போது, ஒருவர் குற்றம்சாட்டப்பட்டிருந்தாலே அவரது வீடுகளை எப்படி இடித்துத் தள்ள முடியும்? ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டாலும் கூட ஒருவருடைய வீடுகள், சொத்துகளை புல்டோசர்கள் இடித்து தள்ள முடியாதே என கண்டனம் தெரிவித்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய பின்னரும் இத்தகைய புல்டோசர் அணுகுமுறையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவும் இல்லையே ஏன் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அத்துடன் நாடு முழுவதுமாக இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்புகிறோம். அதற்காக அனுமதி பெறாத கட்டிடங்களை பாதுகாக்கவில்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இந்த வழக்கில் மனுதாரர்கள் விள்லகமான பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் செப்டம்பர் 17-ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications