17 வருடங்களுக்கு முன்.. தீவிரவாதி அஜ்மல் கசாப் தந்த சின்ன டிப்! ஆபரேஷன் சிந்தூருக்கு உதவியது எப்படி?
டெல்லி: 17 வருடங்களுக்கு முன் மும்பை தீவிரவாத தாக்குதலில் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் விசாரணையின் போது முக்கியமான பல வாக்குமூலங்களை வழங்கினார். அவர் கொடுத்த ஒரு முக்கிய வாக்குமூலம்தான் தற்போது நடந்த ஆபரேஷன் சிந்தூருக்கு பெரிய அளவில் உதவி இருக்கிறது.
இன்று அதிகாலை நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானின் 9 தீவிரவாத தளவாடங்கள் நீக்கப்பட்டு உள்ளன.
ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் 'ஆபரேஷன் சிந்தூர்' இன் கீழ் குறிவைக்கப்பட்டன. இந்திய ஆயுதப்படைகள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது இடங்களைத் தாக்கியது.
குறிவைக்கப்பட்ட பஹாவல்பூர்
முக்கியமாக பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா, தெஹ்ரா கலனில் உள்ள சர்ஜால், கோட்லியில் உள்ள மர்காஸ் அப்பாஸ் மற்றும் முசாஃபராபாத்தில் உள்ள சையத்னா பிலால் முகாம் ஆகிய முகாம்கள் தாக்கப்பட்டன. இதில் பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா மிக முக்கியமான இடங்கள் ஆகும்.

துல்லியமான ராணுவத் தாக்குதல்களில் தாக்கப்பட்ட இலக்குகளில் மேற்கண்ட இடங்கள் அடங்கும். இந்த முகாம்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவின் கீழ் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 14, 2019 அன்று புல்வாமா தாக்குதல் உட்பட பயங்கரவாதத் திட்டமிடலில் ஈடுபட்டுள்ள ஜெ.எம் இன் செயல்பாட்டுத் தலைமையகம் மர்காஸ் சுப்ஹான் அல்லா ஆகும். புல்வாமா தாக்குதல் நடத்தியவர்கள் இந்த முகாமில் பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. 17 வருடங்களுக்கு முன் மும்பை தீவிரவாத தாக்குதலில் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் இங்குதான் பயிற்சி பெற்றார்.
வாக்குமூலம்
அப்போது நடத்திய விசாரணையில், ஜெ.எம் இன் செயல்பாட்டுத் தலைமையகம் மர்காஸ் சுப்ஹான் அல்லாவில் தான் பயிற்சி பெற்றதாகவும் பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லாவில் பலர் பயிற்சி பெற்று வருவதாகவும் இந்தியாவின் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்தார். அவர் அப்போது தந்த டிப் இப்போது அந்த இடத்தை குறி வைக்க முக்கிய காரணமாக மாறி உள்ளது.
அந்த டிப்ஸை தாண்டி.. இன்னும் சில உளவு தகவல்களும் இதற்கு காரணம். மர்காஸ் சுப்ஹான் அல்லா முகாமில்தான் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மௌலானா மசூத் அசார், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் உண்மையான தலைவர் முஃப்தி அப்துல் ரவூப் அஸ்கர், மௌலானா அம்மார் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் குடியிருப்புகள் உள்ளன.
மற்ற இடங்கள்
இதில் தெஹ்ரா கலான் முகாமில் உள்ள சர்ஜல் பகுதி தீவிரவாதிகளின் கடைசி கட்ட தளம் ஆகும். அதாவது ஜம்மு-காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக ஜெய்ஷ்-இ-முகமது பயன்படுத்தும் முக்கிய தீவிரவாத ஏவுதளமாகும் இது.
முர்டிகேயில் உள்ள மர்காஸ் தைபா, பர்னாலாவில் உள்ள மர்காஸ் அஹ்லே ஹதீத் மற்றும் முசாபராபாத்தில் உள்ள ஷ்வாவாய் நல்லா முகாம்கள் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் முகாம்கள் ஆகும். கோட்லியில் உள்ள மகாஸ் ரஹீல் ஷாஹித் மற்றும் சியால்கோட்டில் உள்ள மெஹ்மூனா ஜோயா முகாம்கள் தடைசெய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீனின் முகாம்கள் ஆகும்.
இவை எல்லாம் இன்று அழித்தொழிக்கப்பட்டன. பர்னாலாவில் உள்ள மர்காஸ் அஹ்லே ஹதீஸ் என்ற முகாமும் அழிக்கப்பட்டது. பூஞ்ச் - ராஜௌரி - ரியாசி பகுதியில் உள்ள ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து குடோன்கள் அளிக்கப்பட்டன.
இந்த முகாம்களில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க பாகிஸ்தான் ராணுவமும் ஐஎஸ்ஐயும் சிறப்பு சேவைகள் குழுவை செயல்படுத்தி வந்தது. அங்குதான் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications