கேம் பிளானை கண்டுபிடித்த எடப்பாடி.. உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ்ஸுக்கு வசமாக செக்.. நொறுங்கிய திட்டம்!
டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வத்தின் கேம் பிளானை எடப்பாடி பழனிசாமி தரப்பு நொறுக்கி உள்ளது. இந்த வழக்கில் இன்று சுவாரசிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கு.. பார்க்கில் கட்டப்பட்டு இருக்கும் சீசா போல மேலும் கீழும் இறங்கி கொண்டு இருக்கிறது. முதலில் இதில் எடப்பாடிக்கு ஆதரவாகவும், அதன்பின் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், பின்னர் மீண்டும் எடப்பாடிக்கு ஆதரவாகவும், அதை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவும், கடைசியாக மீண்டும் எடப்பாடிக்கு ஆதரவாகவும் பல்வேறு அமர்வுகளில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். பொதுக்குழு மூலம் இவர் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உடனே உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழு விவகாரம்: பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடை நீட்டிப்பு- டிச.6-ல் விசாரணை
வழக்கு
இந்த வழக்குதான் தற்போது உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த பொதுக்குழு சட்ட விரோதமாக கூடியதாக ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைரமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதில் தனி நீதிபதி அமர்வு பொதுக்குழு கூடியது தவறு என்று தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து எடப்பாடி தரப்பு செய்த மேல்முறையீட்டில் உயர் நீதிமன்ற இரட்டை நீதிபதி அமர்வு பொதுக்குழு கூடியது சரிதான் என்று தீர்ப்பு வழங்கினார்கள். இதில் இப்படி மாறி மாறி தீர்ப்புகள் வந்த நிலையில்தான் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.
உச்ச நீதிமன்றம்
இந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் கடந்த முறை விசாரணையின் போது ஓ பன்னீர்செல்வம் வைத்த வாதத்தில், பொதுக்குழு கூடியதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். பொதுக்குழு தவறான வழியில் கூட்டப்பட்டு உள்ளது. அதிமுகவில் தலைமை கழகம் முடிவுகளை எடுக்க முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் மேற்கொள்ள முடியும். விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுக்குழுவை கூட்டி உள்ளனர். ஆனால் இதை பற்றி உயர் நீதிமன்றம் கவனம் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கி உள்ளது, என்று கூறினார். எடப்பாடி பழனிசாமி வைத்த வாதத்தில், தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை அவசர நேரத்தில் கூட்ட முடியும். அந்த அடிப்படையில்தான் பொதுக்குழுவை கூட்டி உள்ளனர்.பொதுக்குழுவில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அவர்களை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை என்று கூறினார்.
ஓபிஎஸ் வியூகம்
இதையடுத்து கடந்த வாரம் நடந்த விசாரணையில், வழக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான்ஷு துலியா அமர்விற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் ஒரு வாரம் கூடுதல் அவகாசம் கேட்டார். எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே இதில் பதில் மனு தாக்கல் செய்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் தனது பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை. இந்த பதில் மனுவை தாக்கல் செய்ய தனக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் கேட்டு இருந்தார். இதையடுத்து அவருக்கு பதில் மனு தாக்கல் செய்ய 1 வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டது. அதோடு வழக்கும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதாவது நாளை விசாரிப்பதாக இருந்தது.
தாமதம்
அப்போது வழக்கை தள்ளி வைக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நாளை விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு நீதிபதிகளின் வேறு அமர்வுகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. டிசம்பர் 6-இல் திட்டமிட்டபடி நடைபெறும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு வழக்கை 13ம் தேதிக்கு அடுத்த மாதம் தள்ளி வைக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை வைத்தது. ஓ பன்னீர்செல்வம் இந்த வழக்கை முடிந்த அளவு தாமதப்படுத்த நினைக்கிறார் என்று கூறப்படுகிறது. தாமதம் ஆக ஆக தன்னுடைய கரங்கள் வலுப்படும் என்று அவர் நினைக்கிறார். நிறைய நிர்வாகிகள் தன் பக்கம் வருவார்கள். எடப்பாடி கை வலிமை இழக்கும். கடந்த இரண்டு மாதத்தில் நிறைய நிர்வாகிகள், முக்கியமாக மேற்கு மண்டலா நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் வந்துவிட்டனர். இது மேலும் தொடரும் என்று ஓ பன்னீர்செல்வம் நினைக்கிறார் என்று கூறப்படுகிறது.
தாமதம்
இதற்காகவே வழக்கை தாமதம் செய்ய ஓ பன்னீர்செல்வம் நினைக்கிறார். அதோடு விசாரணை நடக்கும் வரை எடப்பாடியால் கட்சிக்குள் எந்த முடிவையும் எடுக்க முடியாது. இதன் காரணமாகவே இன்றும் வழக்கை டிசம்பர் 13 வரை தள்ளி வைக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை வேண்டுமென்றே தாமதம் செய்ய மனுதாரர் தரப்பு பார்க்கிறது. இடைக்கால தடை காரணமாக கட்சி பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. வழக்கை தள்ளி வைக்க வேண்டாம். உடனே விசாரியுங்கள். உடனே வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதில் ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வழக்கு டிசம்பர் 6ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.