சீண்டாத சீனா.. பாராட்டிய பாக்.. ஒதுங்கியது அமெரிக்கா! உக்ரைன் போருக்கு இடையே உயர்ந்த இந்திய மதிப்பு
டெல்லி: உக்ரைன் போருக்கு இடையே இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை பாகிஸ்தான் பாராட்டியதும், சீனா இந்தியாவுடன் சமாதானமாக செல்லும் வகையில் அறிக்கைகளை வெளியிடுவதும் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதோடு தற்போது குவாட் நாடுகளும் இந்தியாவை எதிர்க்காமல் அமைதியாக இருப்பது சர்வதேச அரசியலில் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் கடுமையான அழுத்தங்களை கொடுத்தும் இந்தியா ரஷ்யாவை எதிர்க்கவில்லை. ரஷ்யாவிற்கு எதிராக இந்தியா நிலைப்பாடு எடுக்கவில்லை.
மாறாக இந்த போரில் இந்தியா நடுநிலையோடு இருக்க முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி எதிர்ப்புகளை மீறி ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய்யை வாங்க இந்தியா முன் வந்துள்ளது. உலக நாடுகள் இதை வியப்பாக பார்த்து வருகின்றன.

எதிர்பார்ப்பு என்ன?
இந்த போரில் இந்தியாவின் நிலைப்பாடு மேற்கு உலகிற்கு எதிராக இருந்ததும், கண்டிப்பாக இந்தியா மீது எதாவது நடவடிக்கை எடுக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என்று நம்பப்பட்டது. அல்லது உலக நாடுகள் கண்டனமாவது தெரிவிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் உலக நாடுகள் எதுவும் இந்தியாவை நேரடியாக எதிர்க்கவில்லை. ஏன் கடுமையான கண்டனங்களை கூட தெரிவிக்கவில்லை.

ஆனால் அமெரிக்கா எதிர்க்கவில்லை
இந்த போரில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி பேசிய அமெரிக்கா, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எண்ணெய் வாங்குகிறது, இதை நாங்கள் தவறு என்று சொல்ல மாட்டோம், எங்கள் விதிக்கு எதிரானது. நாங்கள் போட்ட பொருளாதார தடைக்கு எதிரானது இது என்றும் சொல்ல மாட்டோம். ஆனால் இந்திய வரலாற்றில் தவறான பக்கம் இருக்க கூடாது. வரலாறு எழுதப்படும் போது இந்தியா தவறான பக்கத்தில் இருந்துவிட கூடாது என்று மட்டும் அமெரிக்கா கூறியது. இந்தியாவை எதிர்க்காமல் லேசாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

குவாட் உறவு மோசமாகவில்லை
அதேபோல் குவாட் நாடுகளும் இந்தியாவை எதிர்க்கவில்லை. ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் இன்றுதான் பிரதமர் மோடியோடு பேசினார். அதோடு இந்தியாவிற்கான ஆஸ்திரேலியாவின் உயர் கமிஷ்னர் பேரி ஓ பேரல் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் நிலைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். அதை ஏற்றுக்கொள்கிறோம். பிரதமர் மோடி ஏற்கனவே இந்த போர் நிறுத்தத்தப்பட வேண்டும் என்று கூறிவிட்டார். அதோடு தனது நட்புகளை பயன்படுத்தி போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை செய்துவிட்டார்.

ஜப்பான்
இதுவே நல்ல விஷயம்தான். இதனால் இந்தியாவின் நிலைப்பாட்டை எதிர்க்க வேண்டிய அவசியம் கிடையாது, என்று கூறிவிட்டார். ஜப்பானும் இதே கருத்தைதான் தெரிவித்துள்ளது. அதோடு இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீடுகளை செய்யவும் இந்தியா முன் வந்துள்ளது. குவாட் நாடுகள் ஆஸ்திரேலியா, ஜப்பான் இந்தியாவை நேரடியாக எதிர்க்கவில்லை. இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுவிட்டன. இன்னொரு குவாட் நாடான அமெரிக்காவும் இந்தியாவை நேரடியாக இதுவரை எதிர்க்கவில்லை.

பாகிஸ்தான் ஆச்சர்யம்
இப்படி குவாட் நாடுகள் இந்தியாவை எதிர்க்காத பட்சத்தில் பாகிஸ்தானும் இந்தியாவை அதிசயமாக ஆதரித்துள்ளது. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை சிறப்பாக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை மக்களுக்கான கொள்கை. குவாட் நாடுகள் எதிர்க்கும் என்று அஞ்சாமல் இந்தியா செயல்படுகிறது. அமெரிக்கா பற்றி அஞ்சாமல் இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகிறது, இந்தியாவின் முடிவுகளில் அந்த நாட்டு ராணுவ தலையீடு இல்லை. இந்தியாவை நான் வணங்குகிறேன், என்று குறிப்பிட்டார்.

சீனா என்ன சொன்னது?
இது போக இன்னொரு பக்கம் சீனாவும் இந்தியாவிற்கு ஆதரவாக பேசி உள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்கி இ அளித்த பேட்டியில், சீனா இந்தியா இரண்டு நாடுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இரண்டு நாட்டு உறவில் சமீபத்தில் சில பாதிப்புகள் ஏற்பட்டன. இரண்டு நாட்டு உறவில் இது பாதிப்பை ஏற்படுத்தியது. நாம் இருவரும் பார்ட்னர்களாக இருக்க வேண்டும். மாறாக நாம் மோதிக்கொண்டு இருக்க கூடாது. வெளி விஷயங்கள் நம்முடைய இரண்டு நாட்டு உறவில் தலையிட கூடாது.

இஸ்ரேல் அதிபர் வருகிறார்
அந்நிய சக்திகள் இரண்டு நாட்டு உறவை பாதிக்க கூடாது. சர்வதேச அரங்கில் நாம் ஒற்றுமையாக இருப்பது மிக முக்கியம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இப்படி சீனா இந்தியாவின் நட்பை வேண்டி உள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் பென்னட்டும் விரைவில் இந்தியா வர இருக்கிறார். இஸ்ரேல் பிரதமர் பென்னட்தான் உக்ரைன் ரஷ்யா போரில் தீவிரமாக மத்தியசம் பேசி வருகிறார். இந்தியா போல இஸ்ரேலும் போரில் நடுநிலை வகிக்கிறது, இந்த நிலையில்தான் பென்னட் வரும் ஏப்ரல் 2ம் தேதி இந்தியா வர முடிவு செய்துள்ளார்.
Recommended Video

இந்தியா முக்கியத்துவம் பெறுகிறது
மொத்தத்தில் இந்த போர் காரணமாகவோ, அதில் இந்தியாவின் நிலைப்பாடு காரணமாகவோ, இந்தியாவை எந்த நாடும் எதிர்க்கவில்லை. லேசான அமெரிக்காவின் கண்டிப்பை தவிர்த்து இந்தியாவை எந்த நாடும் எதிர்க்க துணியவில்லை. ஒருவகையில் இந்தியாவிற்கு இது அனைத்து பக்கங்களில் இருந்தும் வெற்றியை கொடுக்கும் வெளியுறவுக்கொள்கையாக அமைந்து உள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யாவும் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications