இமயமலை "பேரழிவு.." 12 நாட்களில் படபடவன சரிந்த ஜோஷிமத்! வெளியான சாட்டிலைட் படங்கள்! ஆய்வில் இஸ்ரோ
டெல்லி: இமயமலையில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரம் படுவேகமாக புதைந்து வருகிறது. இதனிடையே இது குறித்து வல்லுநர்கள் நடத்திய ஆய்வில் கடந்த 12 நாட்களில் மட்டும் பல செமீ மண்ணில் புதைந்துள்ளதை வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.
இமயமலையில் அமைந்துள்ள நகரங்களில் ஒன்றான ஜோஷிமத்..இந்த நகரம் வேகமாக மண்ணுக்குள் புதைந்து வருகிறது. இதனால் இந்த நகரமே இப்போது அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளன
திட்டமிடாத கட்டுமானங்களும் வேகமான நகரமயமாக்கலுமே இதற்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஜோஷிமத் அடியே இருக்கும் மண் வலுவானதாக இல்லை என்பதால் அது கட்டுமானங்களின் எடையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இஸ்ரோ
இது குறித்து விசாரணை செய்ய வல்லுநர் குழு ஒன்றையும் அமைத்துள்ளனர். மேலும், மோசமான நிலையில், விரிசல் ஏற்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதனிடையே ஜோஷிமத் நகரம் எந்தளவுக்கு வேகமாகப் புதைந்து வருகிறது என்பது குறித்த தகவல்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதன்படி ஜோஷ்மித் நகர் கடந்த 12 நாட்களில் மட்டும் சுமார் 5.4 சென்டிமீட்டர் அளவுக்கு வேகமாகப் புதைந்துள்ளது இஸ்ரோ அனுப்பிய டேட்டாக்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

பல செமீ புதைந்த நகரம்
இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் வெளியிட்ட சாட்டிலைட் படங்களில் கடந்த டிசம்பர் 27 முதல் ஜனவரி 8 வரை மட்டும் நகரம் 5.4 செ.மீ. மண்ணுக்குள் புதைந்து உள்ளது தெரிய வந்துள்ளது. மண்ணில் ஏற்பட்ட பெரிய விரிசல் காரணமாகவே நகரம் வேகமாகப் புதைந்து வருவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய ஜோஷிமத் பகுதியில், ராணுவ ஹெலிபேட் மற்றும் கோவிலைச் சுற்றிலும் இருக்கும் மண் வேகமாகப் புதையத் தொடங்கியது. இதனால் நகரில் இருக்கும் முக்கிய கட்டிடங்களிலும் கூட பெரியளவுக்கு விரிசல் ஏற்பட்டு மக்கள் வசிக்கவே முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

அதே பிரச்சினை
இதற்கு முன்பும் கூட அங்கு மண் புதைந்து கொண்டு தான் இருந்துள்ளது. ஆனால், அப்போது அது புதையும் வேகமாகக் குறைவாக இருந்ததால் யாரும் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. கடந்தாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ஜோஷிமத் நகர் 9 செ.மீ வரை புதைந்து உள்ளது. அப்போதே இந்த பாதிப்பை உணர்ந்து நடவடிக்கை எடுத்திருந்தால்.. இந்த அழிவைத் தடுத்திருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். அதேநேரம் இந்த பகுதியில் நடைபெறும் சுரங்க கட்டுமானங்களே இதற்குக் காரணம் என்று சாடியுள்ள மக்கள் இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

நுழைவாயில்
பத்ரிநாத் போன்ற இடங்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு இந்த ஜோஷிமத் தான் நுழைவாயிலாக அறியப்படுகிறது. அதேபோல இமயமலை ஏற வருபவர்களுக்கும் இதுவே நுழைவாயிலாக உள்ளது. கடந்த சில நாட்களாக அங்குள்ள கட்டிடங்கள் மற்றும் சாலைகளில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டு ஒட்டுமொத்த நகரமே பேரழிவின் விளிம்பில் உள்ளது. இது குறித்த சாட்டிலைட் ஆய்வுக்குப் பிறகு, அங்கிருந்து சுமார் 4,000 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், அங்குள்ள மக்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு அரசே வாடகை அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தில் ஜோஷிமத்
ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தவிர, 678 வீடுகள் ஆபத்தில் இருப்பதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. திட்டமிடப்படாத மற்றும் குழப்பமான உள்கட்டமைப்பு திட்டங்களே இதற்குக் காரணம் என்று வல்லுநர்கள் சாடுகின்றனர். குறிப்பாக அங்கு அமைக்கும் மின் உற்பத்தி நிலையம் ஒன்றுக்கு மலைகளில் குண்டுகளை வைத்துத் துளையிட்டு வருகிறார்கள். வல்லுநர்கள் அங்குப் பெரிய கட்டுமானங்களே நடக்கக் கூடாது என்று கூறியிருந்த நிலையில், அதை மீறி வெடி வைத்து இவர்கள் பாறைகளைத் தகர்த்து வந்துள்ளனர். இதுவே பேரழிவுக்கு மற்றொரு காரணமாக அமைந்துவிட்டது.

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங்
வல்லுநர்களுடன் ஆய்வு செய்த உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் குழு ஒன்றை அமைத்துள்ளார். தற்போது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1.5 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இது முதற்கட்ட நிவாரண தொகை தான் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் முதல்வர் புஷ்கர் சிங் , விரிவான ஆய்வுக்குப் பிறகு முழு இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications