இரவோடு இரவாக தப்பியோடிய கோவா விடுதி உரிமையாளர்கள்.. சில மணி நேரத்தில் தாய்லாந்து சென்றது எப்படி?
கோவா: கோவா மாநிலத்தின் வடபகுதியில் அர்போரா கிராமத்தில் 'ரோமியோ லேன்' என்ற இரவு விடுதி இருக்கிறது. தலைநகர் பனாஜியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் விடுதியில் உரிமையாளர்களை கைது செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இரவு விடுதியின் உரிமையாளர்கள் இரண்டு பேர் கோவாவில் இருந்து தாய்லாந்துக்கு தப்பியோடியுள்ளனர். விபத்து நடந்த மறுநாள் அவர்கள் தப்பிச்சென்றுள்ளார்களாம். அவர்களை பிடிக்க இண்டர்போல் உதவியை போலீஸ் நாடியுள்ளது.
கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அர்போரா என்ற கிராமத்தில் 'ரோமியோ லேன்' என்ற இரவு விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்ததால் தீப்பிடித்து என்று சொல்கிறார்கள். கண் இமைக்கும் நேரத்தில் பலரும் தீ விபத்தில் சிக்கினார்கள். தகவல் அறிந்து தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து வந்தனர். ஆனால் அவர்கள் மீட்பதற்குள்ளேயே 25 பேர் பலியானார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் இரவு நேர விடுதியின் ஊழியர்கள் ஆவர். 3 பெண்களும் பலியானார்கள். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சம்பவம் குறித்து அறிந்ததும். கோவா முதல்வர் பிரமோத் சவந்த் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியளார்களிடம் கூறுகையில், பலியானவர்களில் 4 பேர் சுற்றுலா பயணிகள். பலியானோரில் 3 பேர் மட்டும் தீக்காயத்தால் இறந்துள்ளனர். மற்றவர்கள் மூச்சுத்திணறித்தான் இறந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். கிளப் என்ன அனுமதிகளைப் பெற்றது, யார் அனுமதி அளித்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். தீ பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் கட்டிட கட்டுமான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதைப் பார்க்க வேண்டும். கிளப் உரிமையாளர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலாளர்கள் மற்றும் பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று முதல்வர் பிரமோத் சவந்த் நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில் டில்லியில் உள்ள கோவா விடுதியின் உரிமையாளர்களான கௌரவ் மற்றும் சௌரப் லூத்ரா ஆகிய இரண்டு பேருக்கும் எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அவர்களைத் தேடி கோவா போலீசார் டெல்லிக்குச் சென்றனர். இருப்பினும், இருவரும் வீட்டில் இல்லை. இதனால், காவல்துறை அவர்களது வீட்டில் நோட்டீஸை ஒட்டி விட்டுச் சென்றது.
தொடர்ந்து கோவா காவல்துறை, ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கும்படி குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். லுக்வுஅட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், நாட்டிலுள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் போன்ற அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களிலும் உள்ள அதிகாரிகளுக்கு, அந்த பெயரில் உள்ளவர்களை தடுத்து, அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள். எனவே வெளிநாடு தப்பிசெல்ல முடியாது.
இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் இருந்து கோவா விடுதியின் உரிமையாளர்களான கௌரவ் மற்றும் சௌரப் லூத்ரா ஆகிய இரண்டு பேரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்குத் தாய்லாந்தின் பூக்கெட்டிற்குப் விமானம் மூலம் தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம், கோவா தீ விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே நடந்துள்ளது. போலீஸ் விசாரணையில் இருந்து தப்பவே அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து அவர்களை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாட சிபிஐ அதிகாரிகளின் உதவியை கோவா போலீசார் நாடியுள்ளனர்.












Click it and Unblock the Notifications