பிரதமர் மோடி எப்படி புகழ்பெற்ற தலைவராகவே உள்ளார்? காரணம் இதுதான்! ரகசியம் உடைத்த பிரசாந்த் கிஷோர்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி எப்படி அனைத்து சர்வேக்களிலும் புகழ்பெற்ற தலைவராக நம்பர் ஒன் இடத்தில் உள்ளார்? என்பது பற்றிய கேள்விக்கு தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பரபரப்பான விளக்கத்தை அளித்துள்ளார்.
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். அதன்பிறகு 2019 தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக பிரதமராகி தொடர்ந்து வருகிறார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று பிரதமராக தொடரும் முனைப்பில் நரேந்திர மோடி வியூகம் வகுத்து வருகிறார். பல மாநிலங்களில் பூத் வாரியாக பாஜகவை பலப்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன.
இதற்கிடையே தான் இந்தியா அளவிலும், உலகளவிலும் அடிக்கடி பல்வேறு நிறுவனங்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் குறித்து கருத்து கணிப்புகளை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இதில் பல கருத்து கணிப்புகளில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். சமீபத்தில் கூட அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்', உலக தலைவர்களின் தலைமை குறித்து அண்மையில் ஆய்வு நடத்தியது.
அமெரிக்கா உட்பட 22 நாடுகளின் மக்களிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடிமுதலிடம் பிடித்தார். இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 76 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் தலைமையை அங்கீகரித்துள்ளனர். 18 சதவீதம் பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி எப்படி அனைத்து சர்வேக்களிலும் புகழ்பெற்ற தலைவராக முன்னிலையில் உள்ளார்? என்பது பற்றி தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
‛‛பிரதமர் மோடி 45 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார். இந்த பயணம் தான் அவரை பலமான தலைவராக மாறி உள்ளது. 15 ஆண்டு சங்கம் வாயிலாகவும், 15 ஆண்டுகள் கட்சிக்காவும் பணி செய்து குஜராத் முதல்வரானார். இந்த அனுபவத்தை வைத்து பார்த்தால் நாட்டில் சிலர் மட்டுமே இப்படி இருப்பார்கள். இந்த நீண்ட அனுபவத்தின் மூலம் தான் பொதுமக்கள் என்ன கேட்க விரும்புகிறார்கள் என்பதை மோடி புரிந்து கொண்டு சிறந்து விளங்குகிறார்'' என்றார்.











Click it and Unblock the Notifications