வாழ்வா? சாவா? 'வெப்ப அலையை'விட உக்கிரமாகும் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்கள்- ஏன் தெரியுமா?
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி கட்சிகளுக்கு முதலாவது அக்னி பரீட்சையாக மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல்கள் இருக்கக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத வகையில் காங்கிரஸ் மற்றும் 'இந்தியா கூட்டணி'யில் உள்ள கட்சிகள் களப் பணியாற்றின. இதனால் 400-க்கும் அதிகமான இடங்களை தனித்தே கைப்பற்றுவோம் என்கிற பாஜகவின் கனவு தகர்க்கப்பட்டு பெரும்பான்மைக்கான 272 இடங்களைக் கூட பெற முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டது.

4 மாநில சட்டசபை தேர்தல்கள்: லோக்சபா தேர்தலில் காட்டிய அதே உத்வேகத்தையும் ஆவேசத்தையும் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், காஷ்மீர் சட்டசபை தேர்தல்களில் காட்ட வேண்டிய நெருக்கடி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல்கள் நடைபெற இருக்கிற ஜார்க்கண்ட், ஹரியானா மாநிலங்களில் பாஜக vs காங்கிரஸ் என்பதுதான் களமாக இருக்கிறது. மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீரில் தேசிய ஜனநாயக கூட்டணி vs இந்தியா கூட்டணி என களம் இருக்கிறது.
ஹரியானா: உதாரணமாக ஹரியானா மாநிலத்தைப் பொறுத்தவரையில் 2019-ம் ஆண்டு மொத்தம் உள்ள 10 லோக்சபா தொகுதிகளையுமே பாஜக கைப்பற்றியது. ஆனால் தற்போதைய லோக்சபா தேர்தலில் பாஜகவால் 5 இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்தது. எஞ்சிய 5 இடங்களையும் காங்கிரஸ் அள்ளியிருக்கிறது. ஹரியானாவில் தற்போது பாஜக ஆட்சிதான் நடக்கிறது என்றாலும் பெரும்பான்மை இல்லாத அரசாகவே இருக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு முன்னர் பாஜகவை ஆதரித்த எம்.எல்.ஏக்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றிருந்தனர்.
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் 'இந்தியா கூட்டணி' அல்லது மகா விகாஸ் ஆகாதி மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 30 இடங்களில் வென்றது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெறும் 17 இடங்களில்தான் வென்றது. ஆனால் 2019-ல் பாஜக கூட்டணியோ மொத்தம் 48 இடங்களில் 43 இடங்களில் வென்றிருந்தது. இந்தியா கூட்டணிக்கு 5 இடங்கள்தான் கிடைத்தன. லோக்சபா தேர்தல் களத்தையும் சட்டசபை தேர்தல் களத்தையும் வாக்காளர்கள் வேறுபடுத்தியே பார்க்கக் கூடும் என்றாலும் அரசியல் கட்சிகள் தற்போதைய லோக்சபா தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வியூகங்கள் வகுப்பதும் வழக்கம்தான். மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தல் முடிவடைந்த உடனேயே பாஜக கூட்டணியில் இருக்கும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் பெரும் அதிருப்தியையும் உட்கட்சி மோதலையும் எதிர்கொண்டிருக்கிறது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவோ பாஜக மீது கடும் அதிருப்தியை கொண்டிருக்கிறது. இதனால்தான் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல் களமானது வடக்கை வாட்டி வதைக்கும் வெப்ப அலையை விட மிக மோசமானதாகவும் உக்கிரமானதாகவும் இருக்கப் போகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications