நோட்டாவுக்கு எத்தனை வாக்குகள்! கடந்த முறை எந்த மாநிலத்தில் அதிகம்? லிஸ்டில் தமிழகம் இருக்கு பாருங்க
டெல்லி: கடந்த லோக்சபா தேர்தலில் சுமார் 65 லட்சத்திற்கும் மேலான வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்த நிலையில், இந்த முறை அது மேலும் அதிகரிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இது எத்தனை பேரின் வெற்றி தோல்வியைப் புரட்டிப் போடப் போகிறது என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.
நமது நாட்டில் லோக்சபா தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடத்தப்பட்ட நிலையில், கடைசிக்கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடத்தப்பட்டது.

இன்று லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், இதில் வேட்பாளர்களுக்கு இணையாக நோட்டாவுக்கு எத்தனை வாக்குகள் விழும் என்பதும் கூர்ந்து கவனிக்கும் ஒன்றாக மாறியுள்ளது. அது என்ன நோட்டா.. இது ஏன் முக்கியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நோட்டா: இந்த நோட்டா என்றால் None of the above என்று அர்த்தம். அதாவது போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் இந்த நோட்டாவில் வாக்கைப் பதிவு செய்யலாம்.
கடந்த 2013ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து இந்த நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் சத்தீஸ்கர், ராஜஸ்தான். மத்தியப் பிரதேசம், டெல்லி சட்டசபைத் தேர்தல்களில் இது அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பிறகு அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்தத் தொடங்கப்பட்டது.
வெற்றி தோல்வி: இந்த நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே இதில் பதிவாகும் வாக்குகள் என்பது கணிசமாகவே இருந்துள்ளது. யாருக்கும் வாக்களிக்காத வேட்பாளர்கள் நோட்டாவுக்கு வாக்களிப்பதால் பல சமயம் இது வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்குக் கூட இருந்துவிடுகிறது. இதனால் சமூக வலைத்தளங்களில் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தனியாகப் பிரச்சாரம் நடந்து வருவதும் தனிக்கதை.
கடந்த தேர்தல்: கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தம் 65,22,772 வாக்குகள் நோட்டாவில் பதிவாகி இருந்தது. அதாவது ஒட்டுமொத்தமாகப் பதிவான வாக்குகளில் சுமார் 1.06% வாக்குகளாகும். இது பல சிறிய கட்சிகள் பெற்ற வாக்குகளை விட அதிகமாகும். கடந்த 2014 லோக்சபா தேர்தலில் 60,02,842 வாக்குகள் பதிவான நிலையில், அதைக் காட்டிலும் கூடுதல் வாக்குகள் 2019 லோக்சபா தேர்தலில் பதிவானது. இந்த முறை நோட்டாவுக்கு விழும் வாக்குகள் அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
மறுபுறம் மாநிலம் வாரியாக பார்க்கும் போது பீகார் மாநிலத்தில் தான் அதிகபட்ச வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி இருந்தது. பீகாரில் மட்டும் 8,16,950 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி இருந்தது. தொடர்ந்து நாட்டிலேயே பெரிய நிலமான உத்தரப் பிரதேசத்தில் 7,25,097 வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தது.
தமிழ்நாடு: மூன்றாவது அதிகபட்சமாகத் தமிழ்நாட்டில் 5,50,577 வாக்குகள் நோட்டாவுக்காக பதிவாகி இருந்தது. மேலும், மேற்கு வங்கத்தில் 5,46,788 வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்து இருந்த நிலையில், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 4,88,766 வாக்குகள் பதிவானது.
இந்த முறை பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே பல தொகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. எனவே, இந்த முறை நோட்டாவில் பதிவாகும் வாக்குகள் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நோட்டா இந்த முறை எத்தனை பேரின் வெற்றி தோல்வியைப் புரட்டிப் போடப் போகிறது என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications