"அந்த" ஒரு ஃபோன் கால்.. ராஜஸ்தான் ராஜ்புத் தலைவர் படுகொலை.. குற்றவாளிகளை தட்டி தூக்கிய போலீசார்
டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் எப்படி கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானில் இயங்கி வரும் ராஜ்புத் கர்னி சேனா என்ற வலதுசாரி அமைப்பு செயல்பட்டு வரும் நிலையில், அதன் தலைவராக சுக்தேவ் சிங் சோகமெடி இருந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டிலேயே வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஏற்கனவே அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இருப்பினும், அதையும் தாண்டி சிலர் அவரது வீட்டிற்குள்ளேயே வந்து அவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு: சுக்தேவ் சிங் சோகமெடியை பார்க்க வருவது போல வந்த அவர்கள், திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாகச் சுட்டுத் தள்ளினர். அவரை தடுக்க வந்த போலீசரையும் சுட்டுத் தள்ளினர். இதில் சுக்தேவ் சிங் சோகமெடி உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தடுக்க முயன்ற இருவர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் போலீசார், ஹரியானாவில் பதுங்கி இருந்த 3 பேரைக் கைது செய்தனர். டெல்லி மற்றும் ராஜஸ்தான் போலீசார் இணைந்து நடத்திய ஆப்ரேஷனில் அவர்களைக் கைது செய்துள்ளனர். அவர்கள் ரோஹித் ரத்தோர் மற்றும் நிதின் ஃபௌஜி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. துப்பாகிச் சூடு நடத்திய இரண்டு பேரும் அவர்களுக்கு உதவிய உதம் சிங் என்பவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
4 பேர் கைது: இந்த வழக்கில் இதுவரை 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் துப்பாக்கிச் சூடு நடத்திய ரோஹித் மற்றும் நிதின் ஆகியோர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல உதவியதாக ராம்வீர் ஜாட் என்பவரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். இந்த ராம்வீர் ஜாட் என்பவர் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைச் சம்பவ இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருந்தார்.
பஞ்சாபைச் சேர்ந்த பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய கேங்ஸ்டரான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் ரோஹித் கோதரா கும்பலுடன் நெருங்கிய தொடர்புடைய ரோஹித் கோதாரா என்ற கும்பல் இந்த கொலைக்குப் பொறுப்பேற்றுள்ளது.
சிக்கியது எப்படி: இதற்கிடையே கோகமேடியை கொன்ற பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கேங் ஸ்டார் ரோஹித் கோதராவின் நெருங்கிய உதவியாளர் வீரேந்திர சௌஹானுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதை வைத்து அவர்கள் மொபைல் நம்பரை கண்டுபிடித்து அதை டிராக் செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு வீரேந்திர சவுகானுக்கு கால் செய்துள்ளனர்.
அதுவே அவர்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டது. முதலில் அவர்கள் ஹிசார் என்ற பகுதி வரை ரயிலில் சென்றதாகவும், பின்னர் உதம் சிங்குடன் மணாலிக்கு சென்றதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளனர். அதன் பிறகு மூன்று பேரும் சண்டிகருக்கு வந்த நிலையில், அங்கே அவர்கள் பிடிபட்டனர். ராஜ்புத் தலைவரின் கொலைக்குப் பிறகு அங்கே பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாகவும் மாறிய நிலையில், இப்போது குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications