ஆளுநர் ஆர்என் ரவி எப்படி செயல்பட வேண்டும்? உச்சநீதிமன்ற உத்தரவுகள் என்னென்ன? அரசு வக்கீல் விளக்கம்
டெல்லி: ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்காத தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு இன்று உச்சநீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. அதோடு ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்றும், ஆளுநர் ஆர்என் ரவி எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றியும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் ஆஜராக வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவது தான்.

இந்த மோதல் என்பது உச்சத்துக்கு சென்றது. குறிப்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க கோரி இடையூறு ஏற்படுத்துகிறார். தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துகிறார். ஒப்புதல் அளிக்காமல் மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கிறார் என்று தமிழக அரசு குற்றம்சாட்டியது.
அதோடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஆண்டு இறுதியில் விசாரிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. அப்போது தமிழக அரசு மற்றும் ஆளுநர் ஆர்என் ரவி தரப்பில் விவாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாட்டுக்கு உச்சநீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் அரசியல் சாசனத்துக்கு விரோதமானதாக இருக்கிறது. தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை நிறுத்தி வைத்து ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுய்பி வைத்தது சட்டவிரோதம். இதனால் இந்த 10 மசோதாக்களையும் உச்சநீதிமன்றமே நிறைவேற்றியதாக அறிவிக்கப்படுகிறது என்றார். அதோடு தமிழக அரசின் மசோதாக்கள் சிலவற்றுக்கு 3 வாரத்திலும் மற்றவைகளுக்கு ஒரு மாதத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
இதன்மூலம் ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்திய 10 மசோதாக்களுக்கும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றி தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சட்டசபையில் 2வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியது தவறு என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளிக்காத 10 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தான் தீர்ப்பின் முக்கிய சாராம்சம்.
இந்த நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை அரசிலயமைப்பு சட்டத்தின் வரம்புக்குள் தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று இந்த தீர்ப்பு வழியாக உறுதி செய்துள்ளது. அரசுக்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்க கூடாது என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் 200வது பிரிவின்படி மசோதா ஒப்புதலுக்கான காலவரையறை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மசோதாவில் ஆளுநருக்கு 3 நிலைப்பாடு இருக்கலாம். ஒன்று ஒப்புதல் அளிப்பது. இரண்டாவது கருத்துகளுடன் சட்டசபைக்கு மீண்டும் திருப்பி அனுப்புவது, 3வது ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது. இந்த 3 அம்சங்களுக்கான அதிகாரங்களின் வரையறைகள் என்பது தீர்ப்பின் மூலம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.
அரசியலமைப்பு சட்டத்தின் 200ம் சட்டப்பிரிவு இதனை தெளிவுப்படுத்துகிறது. அரசியலமைப்பின் 200வது பிரிவின்படி ஆளுநர் வரம்பு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஆலோசனைபடியே ஆளுநர் செயலாற்ற வேண்டும்.
கேரளா ஆளுநர் தொடர்பான விவகாரங்கள் பெண்டிங்கில் உள்ளது. எல்லா ஆளுநர்களின் அதிகாரம் பற்றி அரசியலமைப்பின் 200வது சட்டப்பிரிவு தெரிவிப்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த தீர்ப்பை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதுதான் நாட்டின் சட்டமாக உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications